காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வு பிஷாடன மூர்த்தி எனப்படும் பிச்சாண்டவர் வீதி உலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், மாங்கனிகளை இறைவனுக்கு இரைத்து வழிபாடு நடத்தினர்.

 


காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 63-நாயன்மார்களில் சிறப்பானவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பை பெற்ற காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு மாங்கனி திருவிழா கடந்த 30ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியது.  நேற்று முன்தினம் காலை காரைக்கால் அம்மையார் என்றழைக்கப்படும் புனிதவதி தாயார் பரமதத்த செட்டியார் திருக்கல்யாண வைபவம் அதி விமர்சையாக நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து  முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா கைலாசநாதர் கோயிலில் நேற்று நடைபெற்றது. பிஷாடன மூர்த்தி எனப்படும் பிச்சாண்டவர் சுவாமி சிவவாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் பிரகாரங்களை சுற்றிவந்தார். பின்பு காரைக்காலில் முக்கிய வீதிகள் பிச்சாண்டவர் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது புனிதவதி தாயார் பிச்சாண்டவ மூர்த்தி சுவாமிக்கு மாங்கனியை வழங்கியதை நினைவு கூறும் வகையில் வீதியுலா வரும் இறைவனுக்கு பக்தர்கள் மாங்கனிகளையும், வெண்பட்டு சாற்றியும் ஓம் நமச்சிவாய என்ற கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மாடிகள் மற்றும் கட்டிடங்களின் உச்சிகளில் ஏறி நின்று, மாங்கனிகளை வீசி எறிந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். வீசி எறியப்பட்ட மாங்கனிகள், வானில் இருந்து மாங்கனி மழை பொழிவது போல் காணப்பட்டது. இவற்றை ஆயிரக்கணக்கான பக்தர்கள் போட்டி, போட்டுக்கொண்டு பிடித்தனர். மாங்கனிகளை வீசி எறிவதும், பிடிப்பதாலும், சுவாமி வீதியுலா சென்ற சாலை முழுவதும் மாங்கனிகள் வீசி எறியப்பட்டன.



 

புத்திர பேறு இல்லாதவர்கள் பிச்சாண்டவரையும், காரைக்கால் அம்மையாரையும் வேண்டிவணங்கி சென்றால் புத்திர பாக்கியம் உண்டாகும். அவர்கள் பிறகு வந்து மாங்கனிகளை இரைத்து தங்களின் வேண்டுதலை நிறைவு செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள் கலந்து கொண்டு சிவபெருமானுக்கு மாங்கனி படைத்து வழிபாடு நடத்தினர். மேலும் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் இன்றி தமிழகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி இறைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் பிஷாடன மூர்த்தி என்று அழைக்கப்படும் பிச்சாண்டவ மூர்த்தியை எதிர்கொண்டு அமுது படையலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.