தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி ஆகும். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் வரும் பிரதமை திதி முதல் சப்தமி திதி வரையிலான 7 நாட்கள் மகா கந்த சஷ்டி திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.


முருகனுக்கு மிகவும் உகந்த இந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்றும், கடுமையாக விரதம் இருந்தும் முருகனை வழிபடுவது வழக்கம்.


விரதத்தை எந்த நேரத்தில் தொடங்கலாம்?


நடப்பாண்டிற்கான மகா கந்தசஷ்டி திருவிழாவானது வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அன்றைய நாள் அதிகாலையிலே எழுந்து குளித்துவிட்டு விரதத்தை தொடங்குவது சிறப்பாகும். சில பக்தர்கள் காப்பு கட்டியும் கந்த சஷ்டி திருவிழாவிற்கு விரதம் இருப்பார்கள்.


எப்படி விரதத்தை தொடங்க வேண்டும்?



  • முதல் நாளே வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, முருகன் படத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

  • முருகன் படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிவப்பு நிற மலர் இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

  • முருகன் படத்திற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைக்க வேண்டும்.

  • முருகப்பெருமானுக்கு காய்ச்சிய பாலில் தேன் கலந்து நைவேத்தியமாக படையலிட வேண்டும்.

  • முருகன் படத்திற்கு முன்பு விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.

  • விரதத்தை தொடங்கும் முன்பு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும்.


முருகப்பெருமானிடம் பல வேண்டுதல்களை விரதம் இருக்கும் நாட்களில் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது ஆகும். தேவையற்ற மற்றும் தீய எண்ணங்களில் கவனம் செலுத்தாமல் நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் நிறுத்த வேண்டும்.


முருகன் பாடல்கள்:


முருக சிந்தனையுடன் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம், வேல்மாறல் போன்ற முருகனின் பாடல்களை பாடுவது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.


திருமணம் ஆகாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், வேலை தேடுபவர்கள், குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் மனக்கவலைகள் நீங்கக் கோரி முருகனை வேண்டி இந்த சஷ்டியில் விரதம் இருந்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகும். அனைத்து முருக பக்தர்களும் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடல்நலக்குறைவு இருப்பவர்கள், முதியவர்கள் மனதார வேண்டிக் கொண்டாலே போதுமானது ஆகும்.