இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகை தீபாவளி ஆகும். மிகவும் முக்கியமான இந்த தீபாவளி பண்டிகையை கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது குறித்து கீழே காணலாம்.


நடப்பாண்டில் தீபாவளி எப்போது?


நடப்பாண்டான 2024ல்  தீபாவளி பண்டிகையானது வரும் 31ம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.


தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?


தீபாவளி கொணடாடப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சத்தியபாமா நரகாசூரனை வதம் செய்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் வனவாசம் சென்ற ராமர் தனது வனவாசத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது.


தீபாவளியை இந்துக்கள் மட்டும்தான் கொண்டாடுகிறார்களா?


தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி புத்தர்கள், ஜெயின்கள், சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர்.


வட இந்தியாவில் விளக்குகள் ஏற்றுவது ஏன்?


ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பியதாக கருதி வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுவதால் இருள் நீங்கி மீண்டும் தங்கள் வாழ்வில் ஒளி பிறந்ததால் அதை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றுகின்றனர். சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் இதே நாளில் கட்டத் தொடங்கப்பட்டதால் சீக்கியர்கள் அதைக் கொண்டாடும் விதமாக குருத்வாராக்கள் தோறும் விளக்குகள் ஏற்றுகின்றனர்.


இந்தியாவில் மட்டும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறதா?


தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டும் கொண்டாடப்படவில்லை. உலகில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், விளக்குகள் ஏற்றியும் கொண்டாடுகின்றனர். டிரினாட் – டொபாகோ, மியான்மர், நேபாளம், மொரிஷியஸ், கயானா, சிங்கப்பூர், சுரினம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது,


பட்டாசு வெடிப்பது ஏன்?


தனது தாய் சத்தியபாமாவின் கையால் வதம் செய்யப்பட்ட நரகாசூரன், தனது தாயிடம் தனது இறுதி ஆசையாக தனது மரணத்தை துக்கமாக வருந்தாமல் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதாகவும், அதன் காரணமாக பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.


இந்தியாவில் ஒரே மாதிரியாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறதா?


இந்தியாவில் ஒரே மாதிரி தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் இந்த தீபாவளி, கர்நாடகாவில் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதை தந்தரேஸ் என்கிறார்கள்.


தமிழ்நாட்டில் பட்டாசு வெடித்தே தீபாவளி கொண்டாடப்படும் சூழலில், வட இந்தியாவில் விளக்குகள் ஏற்றியே கொண்டாடுகின்றனர். மேற்கு வங்கத்தில் காளி பூஜை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. குஜராத்திகளுக்கு தீபாவளியானது புத்தாண்டு ஆகும்.