காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி தெப்பல் உற்சவம். அனந்த சரஸ் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியுடன், வலம் வந்த வரதராஜ பெருமாள்.

 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்

 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் பௌர்ணமியை ஒட்டி வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை பட்டு உடுத்தி, திருவாபரங்கள் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து ஆதிசேசனின் அவதாரமான அனந்த சரஸ் திருக்குளத்தை சுற்றி வந்தார்.




 

அனந்த சரஸ்

 

பின்னர் அனந்த சரஸ் திருக்குளத்தில் வாழைமரம், மாவிலை தோரணங்கள், கட்டி பூமாலைகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருந்தேவி தாயார் உடன் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளி முதல் நாளான இன்று  மூன்று முறை வலம் வந்தார். தை மாத பௌர்ணமியை ஓட்டி நடைபெற்ற பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் தெப்பல் உற்சவத்தில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அனந்தசரஸ் திருக்குளத்தின் படித்துறையில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.




தைப்பூசம்:


தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசம் என்பதால், கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் கூட்டம் முருகன் கோயில்களில் அதிகளவு காணப்பட்டது.


பக்தர்கள் விரதம்:


தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரையாகவோ அல்லது வாகனங்களிலோ சென்று வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது விரதத்தை நிறைவேற்றுவார்கள். தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் திருப்புகழ் ஆகிய பாடல்களை கோயில்களில் பக்தர்கள் பாராயணம் செய்வது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கோயிலிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





 கோவில்களில் குவிந்த பக்தர்கள்


 நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு   சாமி தரிசனம் மேற்கொண்டனர்.  இதன் காரணமாக அனைத்து முருகர் கோவில்கள் சிவன் கோவில்கள் தைப்பூசம் விழா நடைபெறும் கோவில்களில் பக்தர்கள் அலைமோதினர்.  பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள்  பூஜைகள் நடைபெற்றது.  நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள்  சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.