காஞ்சிபுரம் புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது 

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐயப்பன் நகரில் உள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 44வது ஆண்டு நவராத்திரி உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. நவராத்திரியில் இரண்டாம் நாளான இன்று தாய் படவேட்டம்மன் பச்சை முத்து கோலத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் தர்மகத்தா சார்பில் விழா குழுவினர்கள் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

 

நீல வண்ண பட்டு உடுத்தி ஆண்டாள் கொண்டையுடன் கையில் கிளி ஏந்திக்கொண்டும், வைரம், வைடூரியங்கள் ஜொலி ஜொலிக்க,செண்பகப் பூ மாலை, ஏலக்காய் மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு லட்சுமி, சரஸ்வதியினருடன் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்பாள் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி நரகாசுரனை  சுரஸம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



 

உலக பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான  காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி  காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் கடந்த 25ந் தேதி முதல்  தொடங்கி வருகின்ற 05ந் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 

இதனையொட்டி காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு தினந்தோரும் விஷேச அபிசேக அலங்காரங்களும், நவாவர்ண பூஜை,கன்யா பூஜை,ஸுவாஸ்னி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் நாள்தோறும் கோவில் உட்புற வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் எழுந்தருளி சுரஸம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.



 

இந்நிலையில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவத்தின் இரண்டாம் நாள் விழாவில், கோயில் உற்சவர் சன்னதியில் இருந்து காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாள் நீல வண்ண பட்டு உடுத்தி ஆண்டாள் கொண்டையுடன் கையில் கிளி ஏந்திக்கொண்டும் வைரம், வைடூரியங்கள் ஜொலி ஜொலிக்க செண்பகப் பூ மாலை, ஏலக்காய் மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு லட்சுமி, சரஸ்வதியினருடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு கோவில் உட் பிரகாரத்தில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



 

 

அங்கு அம்பாளுக்கு பல்வேறு வேத மந்திரங்கள் முழங்கியப்பின்  காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மபாள் நரகாசுரனை  சுரஸம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் கட்டப்பட்டு  அங்கு கூடியிருந்த திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் கண்டுகளித்து காமாட்சியம்பாளை  தரிசித்து சென்றனர்.



 

மேலும் நவராத்திரி மண்டபத்தில் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் உற்சவர் தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருள இருபுறங்களிலும்  வைக்கப்பட்டுள்ள ராமாயணம்,மகாபாரதம் இதிகாசங்கள் மற்றும் பல்வேறு புராண கதைகளை நினைவுப்படுத்தும் விதமான கொலு  பொம்மைகளை உள்ளூர் மற்றும் ஆந்திரா,கேரளா,பெங்களூர் போன்ற வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் கண்டு கழித்தும்,  காமாட்சியம்பாளை  தரிசித்தும் அம்பாளின் பேரருளை பெற்று செல்கின்றனர். இந்த நவராத்திரி மஹோத்ஸவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் வெகு சிறப்பாக செய்துள்ளது.



 

 

உலக பிரசித்திப்பெற்ற,அத்தி வரதர் புகழ் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் நவராத்திரி திருவிழா

 

 

பச்சை பட்டு உடுத்திய பெருந்தேவி தாயாருடன்,பால் ரோஸ் வண்ண பட்டு உடுத்தி வைரம்,வைடூரியம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஜொலி ஜொலிக்க பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு  அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளிய வரதராஜப்பெருமாள். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்றதும்,அத்தி வரதர்  புகழ் பெற்றதுமான ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு நவராத்திரி திருவிழாவில் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.

 

நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாள் உறசவத்தில் பால் ரோஸ் வண்ண பட்டு உடுத்தி வைரம்,வைடூரியம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஜொலி ஜொலிக்க பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு  அலங்காரத்திலும், பச்சை பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவி தாயாரும் கோயில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.

 



 

பின்னர் கோவில் உட் பிரகாரத்தில் வலம் வந்து, வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நூற்றுக்கால் மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் சேவையில்  ஸ்ரீ வரதராஜப்பெருமாளும்,பெருந்தேவி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின் அங்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனைகளுக்கு பின்னர் வரதராஜப்பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் கண்ணாடி அறையில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் திருக்கோயில் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக  செய்திருந்தனர்.