உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ( Kanchipuram Kamakshi Temple )
கோயில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். இந்த அசுரனை பராசக்தி காஞ்சி காமாட்சி அம்மன் அழித்தது வரலாறு.
சக்தி தலங்களில் ஒட்டியான பீட ஸ்தலமாக விளங்கும் முதன்மை ஸ்தலமான உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. லட்சுமி சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்கக்கொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோயில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வான தங்க பல்லக்கு உற்சவம் வரும் 19 ஆம் தேதியும்,ரத உற்சவம் 21ம் தேதியும், வெள்ளிதேர் உற்சவம் 23-ம் தேதியும் நடைபெறும். 26 ஆம் தேதி அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறும். அதனை தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்- ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14 ஆம் தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலாவோடும் திருவிழா தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.