ஒரு மனிதனின் புரிந்துகொள்ளும் இயல்பு எத்தகையது என்றால், இப்போது அவன் எதனுடன் ஈடுபட்டிருக்கிறானோ, அது மட்டுமே அவனது அனுபவத்தில் உண்மையாக இருக்கிறது. இப்போது பெரும்பாலான மக்கள் தங்களது ஐந்து புலன் உறுப்புகளோடு ஈடுபட்டிருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரையில் ஐம்புலன்களால் உணர்வது மட்டுமே உண்மை, அதைத் தவிர வேறு எதுவுமே உண்மையில்லை.


புலன் உறுப்புகளால் பொருள் தன்மையில் இருப்பவற்றை மட்டுமே உணரமுடியும். உங்களது புரிந்துகொள்ளும் திறனானது ஐம்புலன்களுக்குள் அடங்கியிருப்பதால், நீங்கள் வாழ்க்கையென உணரும் அனைத்துமே பொருள்தன்மை சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது: உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள், உங்கள் உயிர்சக்தி, எல்லாமே பொருள் தன்மைதான். நீங்கள் பொருள்தன்மையாக படைக்கப்பட்டுள்ளதை ஒரு துணியைப் போல பார்த்தால், உதாரணத்திற்கு பொருள்தன்மை எனும் துணியின் மீது நீங்கள் வாழ்வதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்த துணியின் மீது நடக்கிறீர்கள், நீங்கள் எதன் மீது நடக்கிறீர்களோ அது மட்டும்தான் உண்மை. ஆனால் நீங்கள் மேலே அண்ணாந்து பார்த்தால் பிரம்மாண்டமான வெட்டவெளி இருப்பது தெரிகிறது, ஆனால் அங்கேயும் பொருள்தன்மையில் இருப்பவற்றை மட்டுமே நீங்கள் அடையாளம் காண்கிறீர்கள்; நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்கள் அல்லது சூரியன் அல்லது சந்திரன் - இவை எல்லாம் பொருள்தன்மையாக இருப்பவை. பொருள்தன்மை இல்லாத எதையும் உங்களால் உணர முடிவதில்லை.




நீங்கள் கோவில் என்று எதை அழைக்கிறீர்களோ, அது இந்த படைத்தல் எனும் துணி மீது ஒரு சிறு துளையிடுவதைப் போன்றது. பொருள்தன்மை லேசானதாக ஆகும் ஒரு வெளியை உருவாக்கி, அது ஐம்புலன்களைக் கடந்த ஒன்றை உங்களுக்கு புலப்படக்கூடியதாக மாற்றுகிறது. பிரதிஷ்டை என்பது பொருள்தன்மையின் ஆதிக்கத்தைக் குறைக்கும் ஒரு அறிவியல். அப்படி குறைக்கும்போது, நீங்கள் விருப்பமாக இருந்தால், பொருள்நிலையைக் கடந்த ஒரு பரிமாணம் உங்களுக்குத் தெள்ளத்தெளிவாகப் புலப்படும். மேற்கூறிய உதாரணத்தைக் கொண்டே விளக்கவேண்டும் என்றால், பொருள்தன்மை என்ற துணியில் ஏற்படுத்தப்படும் துளையைப் போன்றது கோவில். அதில் விழுந்தால் நீங்கள் மிக எளிதாகப் பொருள்தன்மையைக் கடந்து செல்ல முடியும்.


இன்று கோவில்கள் பெரும்பாலும் வணிக வளாகங்களைப் போலவே கட்டப்படுகின்றன - கான்கிரீட், இரும்பு போன்ற எல்லாவற்றையும் கொண்டு கட்டப்படுவதுடன், அதன் நோக்கமும் வணிகமாகவே இருக்கக்கூடும், ஏனென்றால் இன்று அனைத்துமே வணிகமயமாகிவிட்டது. நான் கோவில்களைப் பற்றி பேசும்போது, பழங்காலத்தில் கோவில்கள் கட்டப்பட்ட விதத்தைப் பற்றி பேசுகிறேன். இந்த நாட்டில், பழங்காலத்தில், சிவனுக்கு மட்டுமே கோவில்கள் கட்டப்பட்டன, வேறு யாருக்கும் கோவில்கள் கட்டப்படவில்லை. பிற்காலத்தில் தான் மற்ற கோவில்கள் உருவாகின. ஏனென்றால் மக்கள் உடனடி நல்வாழ்வின் மீது கவனம் செலுத்தத் துவங்கினார்கள். இந்த அறிவியலைப் பயன்படுத்தி, மற்ற பல வடிவங்களை உருவாக்கத் துவங்கினார்கள். ஆரோக்கியம், செல்வவளம், நல்வாழ்வு, மற்றும் பல விதங்களில் பயனடைவதற்கான பல கோவில்களை உருவாக்கினார்கள். விதவிதமான சக்திகளையும் விதவிதமான தெய்வீக வடிவங்களையும் உருவாக்கினார்கள். உங்களுக்கு செல்வம் வேண்டுமென்றால், அதற்கு உதவும் விதமான ஒரு வடிவத்தை உருவாக்கினார்கள். அல்லது நீங்கள் தீராத பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விடுபட வேறொரு விதமான வடிவத்தை உருவாக்கினார்கள். இந்த கோவில்கள் எல்லாம் கடந்த 1100 அல்லது 1200 ஆண்டுகளில் உருவானவை. ஆனால் அதற்கு முன் இந்த நாட்டில் சிவன் கோவில்களைத் தவிர வேறு கோவில்கள் இருக்கவில்லை.


'சிவா' என்ற சொல்லுக்கு 'எது இல்லையோ அது' என்று பொருள். எனவே, 'எது கட்டப்பட்டது. 'எது இருக்கிறதோ' அது பொருள் தன்மையில் வடிவெடுத்துள்ளது; 'எது இல்லையோ அது' பொருள் தன்மையைக் கடந்து இருப்பது. எனவே கோவில் என்பது, எது இல்லையோ அதற்குள் நுழைவதற்கான ஒரு துளை. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான சிவன் கோயில்கள் இருக்கின்றன, அதில் பெரும்பாலானவற்றில் உருவம் என்று எதுவும் இல்லை. அவற்றில் ஒரு குறியீடான வடிவம் மட்டுமே உள்ளது, பொதுவாக அது லிங்க வடிவமாக இருக்கிறது. 'லிங்கம்' என்ற சொல்லுக்கு 'வடிவம்' என்று பொருள். நாம் இதை ‘வடிவம்’ என்று அழைக்கக் காரணம், பொருளற்றது பொருள் வடிவத்தை எடுக்கத் துவங்கியபோது, அதாவது படைத்தல் நிகழத் துவங்கியபோது, அது எடுத்த முதல் வடிவம் ஒரு நீள்வட்ட வடிவம். ஒரு மிகத் துல்லியமான நீள்வட்ட வடிவத்தையே நாம் லிங்கம் என்று அழைக்கிறோம். இன்று நவீன அண்டவியல் வல்லுநர்கள் இதை பல்வேறு விதங்களில் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விண்மீன் மண்டலமும் நீள்வட்ட வடிவிலேயே அமைந்திருக்கிறது. அது எப்போதும் நீள்வட்டம் அல்லது லிங்க வடிவமாகத்தான் உருவெடுக்கத் துவங்குகிறது, பிறகு பலவிதமான வடிவங்களை எடுக்கிறது. நமது அனுபவத்திலிருந்தே நமக்கு இது தெரியும், நீங்கள் ஆழமான தியான நிலைகளுக்குச் செல்லும்போது, முழுமையாகக் கரையும் நிலைக்கு சற்று முன்னதாக, மீண்டும் சக்தியானது நீள்வட்ட வடிவம் அல்லது லிங்க வடிவத்தை எடுக்கிறது.




எனவே முதல் வடிவம் லிங்கம், இறுதி வடிவமும் லிங்கம் தான்; இதற்கு இடைப்பட்ட வெளியில் படைத்தல் நிகழ்கிறது, இவற்றை எல்லாம் கடந்த தன்மையே சிவா. எனவே லிங்க வடிவமானது படைத்தல் எனும் துணியில் ஒரு துளை. இங்கு படைத்தல் பொருள்தன்மையில் இருக்கிறது; இதற்கான பின்வாசல் லிங்கம், முன்வாசலும் லிங்கம். எனவேதான் கோவில் என்பது நீங்கள் பொருள்தன்மைக்கு அப்பால் விழுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள துளை என்கிறேன்; இதுவே கோவிலின் அடிப்படை.


யார் சத்குரு..? 


இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஐம்பது நபர்களில் ஒருவரான சத்குரு, ஒரு யோகியாக, ஞானியாக, தொலைநோக்குப் பார்வை உடையவராக, அதிகம் விற்பனையாகும் புத்தக எழுத்தாளராக நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளவராகத் திகழ்கிறார். சத்குருவிற்கு 2017ம் ஆண்டில் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கியது, இது தனிச்சிறப்பு வாய்ந்த சிறந்த சேவைக்காக இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய வருடாந்திர விருதாகும். அவர் 391 கோடிக்கும் அதிகமான மக்களைத் தொட்டுள்ள உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமான கான்சியஸ் ப்ளானட் - மண் காப்போம் இயக்கத்தைத் துவங்கியவரும் ஆவார்.


(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)