தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விளங்குகிறது. சேலம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு பட்டிக்கும் நாயகியாக விளங்கக்கூடிய கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. கோட்டைக்கு மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் 27 ஆம் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 



இந்த நிலையில் இன்று பதிய கொடி மரம் நிறுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட வைப்பவங்கள் நடைபெற்ற பின்னர் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கொடி மரம் நிறுவப்படும் இடத்தில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் பதியப்பட்டது. குருக்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தினை வேதங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது.


புதிய கொடி மரம் நிறுவும் நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தரிசனம் செய்தனர். மேலும் புதிய கொடி மரத்திற்கும் அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாக சாலை பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன நாளை அஷ்டப்பலி பூஜை நடைபெறுகிறது. வரும் 24 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி விக்ரங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் வேள்வி வழிபாடு மற்றும் 26-ம் தேதி ராஜகோபுரம் விமானங்களில் கலசங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி கோட்டை மாரியம்மன்க்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவில் ஏற்பாட்டினை அறங்காவல் குழு தலைவர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் சாந்த மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.



குறிப்பாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கருவறை பின்புறம் பண்டிகை காலங்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று இந்து அறநிலைத்துறை சார்பாக சுவற்றில் 20 அடியில் மாரியம்மனின் திருவுருவம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கருவறை மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்தார்.