ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அம்மன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் 6 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், 15 துணை காவல் கண்காணிப்பாளர்கள் என ஆயிரதிற்கும் மேற்பட்ட   காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  




திருவிழாவின் வரலாறு: 


தந்தை சொல்லை தட்டாத பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி பின் வரம்பெற்று மீண்டும் உயிர்பித்த நிகழ்வு சிரசு திருவிழாவாக கொண்டாப்படுகிறது. முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பின்னர் ரேணுகா தேவிக்கும் ஜமதக்கனி முனிவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் பிறந்தனர். ரேணுகா தேவி ஒருநாள் தாமரை குளம் சென்று நீராடிவிட்டு, மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. கந்தர்வ உருவத்தால் மெய் மறந்து போனார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் நடந்ததை தனது ஞான கண்ணால் அறிந்த முனிவர் ஜமதக்கனி மனைவி கற்பு தவறியதால் அவரின் தலையை வெட்ட தனது 4 மகன்களுக்கு உத்தரவிடுகிறார். அதில் மூன்று மகன்கள் தாயின் மீது உள்ள பாசத்தால் இதை மறுத்ததால் நான்காவது மகன் தந்தை சொல்லை தட்டாமல் தனது தாயின் தலையை வெட்ட செல்கிறார். இதனை அறிந்த ரேணுகாதேவி ஓடிச் சென்று அருகே இருந்த இடுகாட்டில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைகிறார்.




கங்கை அம்மன் சிரசு திருவிழா கொண்டாட்டம் 


அவரை வெட்ட நான்காவது மகன் முயற்சித்தபோது இதனை தடுக்க குறுக்கே வந்த வெட்டியானின் மனைவியின் தலையையும் பரசுராமன் வெட்டி விடுகிறார். தனது தாயின் தலையோடு தந்தை ஜமதக்கனி முனிவரை சென்று சந்திக்கிறார் மகன் பரசுராமன். தனது சொல்லை நிறைவேற்றிய மகனை பாராட்டிய முனிவர் ஜமதக்கனி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். அதற்கு தனது தாய் மீண்டும் உயிரோடு வேண்டும் என வரம் கேட்கிறார் மகன் பரசுராமன். வரத்தை முனிவர் ஜமதக்கனி அளிக்கவே மிக வேகமாக சென்று அவசரத்தில் வெட்டியானின் வீட்டில் கிடந்த இரண்டு உடல்களில் வெட்டியானின் மனைவி உடலில் ரேணுகா தேவியின் தலையையும், தாய் ரேணுகா தேவியின் உடலில் வெட்டி யானின் மனைவி தலையையும் என மாற்றி மாற்றி தலையை பொறுத்து விடுகிறார் பரசுராமன். இத்தகைய நிகழ்வு குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.