நாடு முழுவதும் இன்று ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதுதொடர்பான தகவல்களை காணலாம். 


கிருஷ்ண ஜெயந்தி வரலாறு 


புராணங்களில் சொல்லப்படுவது போல, “மதுராவை ஆண்ட அரக்கன் கம்சனின் தங்கை தேவகியை வசுதேவர் மணமுடித்தார். மணமக்கள் இருவரையும் ரதத்தில் வைத்து ஊர்வலம் அழைத்து சென்றார். மகிழ்ச்சியான அந்த திருமணம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. வானுலகில் இருந்து வந்த ஒரு அசசரீ குரல், தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனை அழிப்பான் என கூறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவனோ, தங்கையை கொல்ல முயன்றான். 


அப்போது கம்சனை பார்த்து கும்பிட்ட வசுதேவர், தன் மனைவியை விட்டு விடுமாறு வேண்டியதோடு தங்களுக்கு பிறந்த குழந்தையை கம்சனிடம் கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து வசுதேவர், தேவகி இருவரையும் கம்சன் சிறையில் அடைக்கிறான். இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் பிறந்த நிலையில் அவற்றை கம்சன் கொல்கிறான். ஏழாவது குழந்தை கருவிலேயே இறந்தது. இதனைத் தொடர்ந்து எட்டாவதாக குழந்தை உருவாக அதனை நினைத்து தேவகி, வசுதேவர் இருவரும் கலங்கினர். 


அப்போது அவர்கள் முன் திடீரென  தோன்றிய விஷ்ணு பகவான், ‘உங்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற நானே அவதாரம் எடுத்து வரப்போகிறேன்’ என கூறினார். குழந்தை பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு  கோகுலத்தில் உள்ள நந்தகோபரிடம் ஒப்படைக்குமாறு வசுதேவரிடம் கூறினார். நந்த கோபரின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பார் என்றும் அந்த குழந்தைக்கு பதிலாக தன்னை மாற்றி வைத்து விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வசுதேவர் எடுத்து கொண்டு வர வேண்டும் என சொல்ல அப்படியே நடைபெறுகிறது. 


இதையும் படிங்க: Gokulashtami 2023: ”கோகுலத்து கண்ணா.. கண்ணா” .. மெய் சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணர் பற்றிய சினிமா பாடல்கள்..!


இப்படியாக ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர தினத்தன்று அஷ்டமி திதி நாளில் நடுஇரவில் கண்ணன் அவதரித்தார் .  குழந்தை பருவத்திலேயே தன்னுடைய மாமாவான அரக்கன் கம்சனை வதம் செய்தார் கிருஷ்ணர். 


பூஜை செய்ய நல்ல நேரம் எது?


கிருஷ்ணர் அவதரித்த இந்த தினமானது கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (செப்.6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 


மேலும் இன்று மாலை 3.37 மணிக்கு பிறகு தான் அஷ்டமி திதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 4.14 மணிக்கு முடிவடைகிறது. அதே போல் இன்று மாலை 3.25 மணிக்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் தொடங்குகிறது. அதோடு செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்பதால் அவரை  வழிபட இரவு 11:57 மணி முதல் நள்ளிரவு 12.42 வரை வரை உகந்த நேரமாகும். 


அதேபோல் கிருஷ்ணரை வழிபட பூஜை செய்வதற்கு மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை செய்யலாம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து பூஜை செய்தால் விரைவில் உங்கள் வீட்டிலும் குழந்தை இல்லாதவர்களுக்கு கண்ணன் பிறப்பான் என்பது ஐதீகமாக நம்பப்படுகிறது.  இந்த நாளில் கிருஷ்ணரின் சிலை மற்றும் படத்திற்கு பழங்கள், மலர்கள், நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்கள், வெண்ணெய் ஆகியவை படைத்து வழிபடலாம். மேலும் வீட்டில் குழந்தையை கால்தடம் பதிப்பது கிருஷ்ணர் குழந்தையாக தவழ்ந்து வீட்டிற்கு வருவதை குறிக்கும் என்பதால், ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் பூண்டு அழகு பார்ப்பார்கள்.




மேலும் படிக்க: Krishna Jayanthi 2023 Recipes: ஈசியா செய்யலாம்... சுவையோ செம்ம! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் வெல்ல சீடை!