விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...பொழுது முழுதும் கொண்டாட்டம்தான். மோதகப் பிரியன், பிள்ளையார், விநாயகர் அவருக்குப் பிடித்த கொழுக்கட்டையும் ஒன்று சேர நம் ஊரில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் பத்து நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சதுர்த்தி தினம் அன்று விநாயகர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 


விநாயகர் சதூர்த்தி


எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மாற வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான்.


ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.பிள்ளையார் சதுர்த்தி என்றாலே முந்தி விநாயகருக்கு முந்தி நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை. முதலில் வீடு, கோயில் அல்லது பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டி செய்து மந்திரங்கள் ஓதி பூஜை செய்கின்றனர்.


பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம், வாசனை எண்ணெய்களால் விநாயகரைக் குளிப்பாட்டி அலங்கரித்து பாசுரங்கள் மந்திரங்கள் ஓதி வணங்குவர். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாக்களில் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும், அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக வட இந்திய மக்கள் ஆடிபாடி பட்டாசுகள் வெடித்து  விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர்.


நீங்களும் உங்கள் வீடுகளில் அலங்காரம் செய்ய, மினிமம் செலவில் அழகாக வீட்டை மாற்ற எளிதான ஐடியாக்கள் இதோ!


பேப்பர் போதுமே


ஸ்டேஸ்னரி கடைகளில் வண்ண காகிதங்கள் கிடைக்கும் அதை வைத்து இலைகள், பூக்கள், மாவிலை தோரணம் போன்று செய்து வீடு முழுக்க அலங்கரிக்கலாம். 


விநாயகர் வைக்க போகும் மேஜையை அழகான துணி வைத்து அதன் மேலா விநாயகர் சிலையை வைக்கலாம். மலர்கள் கொண்டு அலங்கரிக்கலாம். குறைந்த ஒளி தரக்கூடிய விளக்குகளை (சீரியல் லைட்ஸ்) பயன்படுத்துவது இன்னும் அழகு சேர்க்கும். 


அட்டைப் பெட்டிகள் இருந்தால் அதில் ஓம் என்ற வடிவத்தை உருவாக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் இதை செய்ய சொன்னால அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக மகிழ்ச்சியாக உணர்வார்கள்.


வண்ண வண்ண துணி, காகிதங்கள், மலர்கள், மெழுகுவர்த்தி, விளக்குகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்தவாறு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இதை செய்வது சிறந்தது. 


பொங்கல், தீபாவளிக்கு மட்டுமல்ல விநாயகர் சதுர்த்திக்கும் ரங்கோலி சிறப்பான அலங்கரமாக இருக்கும். பிரதான நுழைவாயில், பூஜை அறை ஆகிய இடங்களில் பல வண்ண நிறங்களைக் கொண்டு பெரிய அளவிலான ரங்கோலிகளை வரையலாம். ரங்கோலியை மேலும் பிரகாசமாக்க பூக்கள் அல்லது விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கலாம். 


எது சிறந்தது:


வாஸ்க்து சாஸ்திரத்தின்படி, வெள்ளை நிற விநாயகர் சிலை வீட்டில் செய்யும் பூஜைக்கு நல்லதென கூறப்படுகிறது. வெள்ளை நிற விநாயகர் அமைதி மற்றும் செழிப்பின் உருவமாக கருதப்படுகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மண்ணாலான சிலைகளை பயன்படுத்துமாறும் சொல்கின்றனர்.


விநாயகர் சதூர்த்தி நாளில் எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிட்டட்டும். வாழ்த்துகள்.


பால் கொழுக்கட்டை


தேவையான பொருள்கள்


அரிசி மாவு - 1/2 கப்


தேங்காய் பால் - 1/2 கப்


சர்க்கரை - 1/4 கப்


ஏலக்காய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்


தண்ணீர் - 2 கப்


உப்பு - 1/2 டீஸ்பூன்


தேங்காய்த் துருவல் - 1/4 கப்


செய்முறை


அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும். பின் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். வாணலியில் தண்ணீர் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.


15 நிமிடத்துக்கு பின் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார். ருசித்து சாப்பிடுங்க.. 


இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.. நன்மை உண்டாகட்டும்.