தமிழ் வேதம் என போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களுக்கான உரை அடங்கிய சுவடி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.




தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டிப்பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் 12 சுவடியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து சுவடிகளைக் கண்டுபிடித்து முதற்கட்டமாக அட்டவணைப்படுத்தி வருவதோடு பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 199 கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.




இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் சுவடிக் கள ஆய்வாளர் ம.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படிகள ஆய்வு செய்தார். களஆய்வில் கோயிலில் அரிய ஓலைச்சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்தார்.




இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பாசிரியர் முனைவர் ஜெ.சசிகுமார் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் கே.வி.முரளிதரன் அவர்களுக்கும் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா அவர்களுக்கும் தகவல் தெரிவித்தார். கூடுதல் ஆணையர் அவர்கள் சுவடிகள் பராமரிப்பு பணியை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தினார். சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சுவடியியல் ஆய்வாளர் தமிழ்ச் சந்தியா அவர்கள் தலைமையில் ஒரு குழுவைப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். இக்குழு கோயிலில் இருந்த சுவடிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.




இக்கோயிலில் நடைபெறும் சுவடிப் பராமரிப்புப் பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்கள் கூறியதாவது: ஆழ்வாதிருநகர் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் 19 சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சுவடிக்கட்டுகளில் ஒரு கட்டு தமிழ் வேதம் என்று போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி எனும் நூலின் இரண்டாம் பத்துக்கும் மூன்றாம் பத்துக்கும் உரைமட்டும் உள்ள ஓலைச்சுவடி ஆகும். இச்சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது. எனினும் இச்சுவடி ஆய்வுக்குரிய அரியச் சுவடி ஆகும்.மேலும் இக்கோயிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச்சுவடிக்கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.




இச்சுவடிக்கட்டுகளில் கோயிலின் பழமை  வரவு செலவு கணக்குக் குறிப்புகள் உள்ளன. இச் சுவடிகள் பழமையானவை என்பதாலும் சுவடிகள் பூச்சிகள் அரித்து செல்லரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவற்றை உடனே பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.


ஓலைச்சுவடியின் ஆயுட்காலம் சுமார் 200 ஆண்டுகள் மட்டுமே என்ற நிலையில் அதனைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாத்து புத்தகமாக்கும் திட்டத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகளை பராமரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.