திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் தை பூசத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நிலா பெண் யார் என்பதை தேர்வு செய்யும் சடங்குகள் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. இதற்காக ஊரில் உள்ள சிறுமிகள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் மாசடச்சியம்மன் கோயிலுக்கு பால் கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து 7 நாட்கள், தங்களது வீடுகளில் இருந்து சிறுமிகள் பலவகை சாதம் தயார் செய்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி சிறுமிகள் வழிபாடு செய்தனர்.




பின்னர் அந்த சாதத்தை சிறுமிகள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர். இந்த வினோத வழிபாட்டின் 8 ஆவது நாள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்வது வழக்கம். அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு நிலா பெண்ணாக இருப்பார். அதன்படி இந்தாண்டு கார்த்திகேயன் மேகலா தம்பதியின் பத்து வயது மகள் சர்வ அதிர்ஷ்டா என்பவர் நிலா பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதை தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த அதிர்ஷ்டாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை அமர வைத்து ஆவாரம் பூக்களை பறித்து வந்தனர். அந்த பூக்களை மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்தனர். சிறுமியின் தலை, கைகளிலும் ஆவாரம் பூவை சூட்டி அலங்கரித்தனர். பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை நிரப்பி அதனை சிறுமியின் தலை மீது வைத்தனர். அந்த கூடையை சுமந்தபடி சிறுமி ஊர்வலமாக  அழைத்து வரப்பட்டாள்.




பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று தோழிகளுடன் நிலா பெண்ணான சிறுமியை அமர வைத்தனர். அங்கு கும்மி அடித்து ஆண்கள், பெண்கள் பாட்டுப்பாடி சிறுமியை சுற்றி வந்தனர். பின்னர் மாசடச்சியம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்தனர். அங்கு சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர்.  அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். அங்கு கோவில் முன்பு மாவிளக்கு வைத்து, அதன் நடுவே சிறுமியை அமர வைத்து சுற்றி வந்து பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். நேற்று அதிகாலையில் கிராம மக்கள் சிறுமியை, அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு சென்றனர். 




அந்த கிணற்றுக்குள் படிகள் வழியாக சிறுமியுடன் இறங்கினர். அங்கு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டனர். அவை பந்துபோல மிதந்தது. அதன் மீது மண் கலயத்தை வைத்து எண்ணெய் ஊற்றி திரி வைத்து நிலா பெண்ணான சிறுமி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தவுடன், கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.  100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கோட்டூர் கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.