பழனி கோயில் சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பாளர்களில்   மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்  மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை,  தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

 


பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு

 


ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

 

இந்நிலையில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை, அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் “139 ஆக்கிரமிப்பாளர்களை பழனி கோயில் அடிவாரத்தை சுற்றி , கோயிலுக்கு  சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கியவுடன் , ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று இடத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்களிடம் கையெப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால்  பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள்,  தங்கள் பெயரில் மாற்று இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மறுக்கின்றனர்.

 

அப்போது தான் மாற்று இடத்திற்கு செல்ல சம்மதிப்போம் என  கையொப்பம்மிடுவோம்” என மறுக்கின்றனர்.  எனவே கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதமாகிறது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

 

இதை தொடர்ந்து நீதிபதிகள், பழனி கோயிலை சுற்றி , கோயிலுக்கு  சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139 ஆக்கிரமிப்பாளர்களிடம் , மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம் இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு,  கால அவகாசம் கொடுங்கள். மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும்.

 

அதன் பின்  ஆக்கிரமிப்பாளர்களை,  தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  தாசில்தார்  தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.