வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் 90- ஆவது ஆண்டு பிரியாணி திருவிழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமங்கலத்தில் நடைபெற்ற பிரியாணி திருவிழா


திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோயிலில் முழு உருவ சிலை உள்ள ஒரே கோயில் இதுதான். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களால் கொண்டாடப்படும் திருவிழா இத்திருவிழாவாகும். ஆண்டுதோறும் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 90வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர்.

 

சாமி தரிசனம்


இந்நிலையில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை  பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, கொண்டு வரும் பாலைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் குத்தாட்டத்துடன் ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய்உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.

 

கமகமக்கும் அசைவ பிரியாணி


 

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் உள்ளிட்ட பலஇடங்களில் இந்த சமூகத்தை (நாயுடு) சேர்ந்த ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ சீரகச்சம்பா அரிசியில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை கொட்டி ஆவி பறக்க கமகமக்கும் அசைவ பிரியாணி இருபதுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்தனர்.

பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.


அதிகாலை ஐந்து மணிக்கு கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர், பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் வடக்கம்பட்டி, கள்ளிக்குடி, விலலூர், அகத்தாபட்டி, புளியம்பட்டி  உள்ளிட்ட அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் கொட்டும் பனியிலும் விடிய விடிய வரிசையில் காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர். இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின்போது பெண்பார்க்கும் படலமும், பெண் பார்த்து பிடித்து போனவர்களுக்கு உடனடியாக திருமணமும் நடத்தியதும் உண்டு என பக்தர்கள் தெரிவித்தனர்.