2023 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் யாத்திரை முடியும் என்று தெரிகிறது. இதற்கான பதிவு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று (நாளை) ஆன்லைனில் தொடங்குகிறது.


அமர்நாத் யாத்திரை:

ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு சென்று பனிலிங்க தரிசனம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கொரோனா பரவலுக்குப் பின்னர் 2 ஆண்டுகள் தடைபட்ட யாத்திரை 2022ல் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டு யாத்திரை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை அமைதியாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடிப்பதாக உறுதி பூண்டுள்ளோம் என்றார்.


பழமையான சிவன் கோயில்:


அமர்நாத் குடைவரைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.


அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது.


பலத்த பாதுகாப்பு:


இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.


இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால் இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.


இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாகும்.


யாத்திரை பாதைகள்:


இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையானது அனந்தநாக் மாவட்டம் பாஹல்கம் வழியாகவும், கண்டர்பால் மாவட்டம் பல்டால் வழியாகவும் ஒரே நேரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. யாத்ரீகர்கள் வசதிக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை ஆப் நிறுவப்பட்டுள்ளது. அதில் யாத்திரை பதிவு தொடங்கி அத்தனை விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர காலநிலை, பக்தர்கள் பயண சேவை விவரங்கள் என அனைத்தும் ரியல் டைம் தகவலாக கொடுக்கப்பட்டுள்ளன.


அமர்நாத் யாத்திரை தொடங்கிவிட்டால் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்படுவது வழக்கம்.  காஷ்மீரின் தென்பகுதிகளான பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் நிறைந்த  குல்காம், சோபியான், புல்வாமா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்படுவர். ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.