Yashasvi Jaiswal: முதல் போட்டியிலே பல சாதனைகளை முறியடித்த இளம்புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிற்கு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் விளையாட சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் 387 பந்துகளில் 171 ரன்களை குவித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியிலே தனது முதல் சதத்தை அடித்த மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை எதிர்கொண்டு 171 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக பந்துகளை சமாளித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
வெளிநாட்டு மண்ணில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார் ஜெய்ஸ்வால் (171). இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 131 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.