Aditya L1: சூரியனை ஆராய புறப்படும் ஆதித்யா-எல் 1..தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இந்த மாதம் 23ஆம் தேதி மாலை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது இஸ்ரோ. அதன்படி, நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்த நிலையில், அந்த விண்கலம் எப்போது ஏவப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, சூரியனில் ஒளிந்திருக்கும் மர்மங்களை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா - எல்1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தை விட 4 மடங்கு அதிக தூரத்தை கடந்து ஆதித்யா - எல்1 விண்கலம் பயணிக்க உள்ளது. அதாவது, பூமியில் இருந்து 1.5 மில்லியின் கிமீ தூரத்திற்கு ஆதித்யா - எல்1 பயணிக்கப்பட உள்ளது.
சந்திரயானின் வெற்றியை அடுத்து ஆதித்யா மிஷன் குறித்த எதிர்ப்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.