இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையிலான போர் ஒரு முடிவிலி. அண்மையில் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லையில் இருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதியில் அண்மையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் இடதுசாரிகள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் கல் எறிந்து தாக்குதல் நடத்தினார்கள்.இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையே அண்மையில் அதே வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதுகெலும்பில் துப்பாக்கி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உயிர் மீட்கப்பட்டுள்ளார்.




வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்தவர் அடி போலி. இவர் அதே பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது நட்பின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கே துப்பாக்கித் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் இவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தாலும் முதுகுப் பகுதியில் அதன் பிறகு தொடர் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தும் காரணம் புரியாத நிலையில் அண்மையில் அவருக்கு முதுகுத் தண்டில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குண்டைப் பார்த்ததும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். அகற்றியபிறகுதான் அது 5 மில்லி மீட்டர் துப்பாக்கி ரவை எனத் தெரிய வந்துள்ளது. முதுகுத் தண்டை துளைத்த ரவை சற்று தள்ளித் துளைத்திருந்தாலும் உடலின் பல்வேறு பகுதிகளை பாதித்திருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


இதுகுறித்துப் பேசியுள்ள அடி போலி, ‘நான் முக்மாஸ் என்கிற பாலஸ்தீனிய கிராமத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டேன்.ஆனால் திருமணத்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதில் நான் கீழே விழுந்தேன். அப்போது எனது முதுகுப் பகுதியில் சிறிய  வலி ஏற்பட்டது. தசைப் பிடிப்புதான் என அப்போது நினைத்தேன். உண்மையில் அப்போது குண்டு துளைத்ததால்தான் எனக்கு வலித்துள்ளது.என் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலில் இருந்து வெஸ்ட் பேங்கில் அத்துமீறி நுழைந்தவர்கள் குஃபூர் அல் தீக் என்னும் கிராமப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பாலஸ்தீனியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் காட்சி கீழே.. இஸ்ரேலியர்கள் சிலர் பாலஸ்தீனிய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் தொடர்ச்சியாக எல்லை கடந்த வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.