கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் போர் நடந்து வருகிறது. இந்த விவகாரம் உலக நாடுகளையே இரண்டு துருவங்களாக பிளவுப்பட்டுள்ளது. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.


சீனாவின் நிலைப்பாடு என்ன?


இதில், தாங்கள் நடுநிலைமையுடன் இருப்பது போன்ற தோற்றத்தை சீன முன்னிறுத்த முயன்றபோதிலும், அது ரஷியாவுக்கு ஆதரவான போக்கையே முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


எனவே, உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைபாட்டை மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த விவகாரத்தில் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் இருந்து வருகிறது இந்தியா.


இத்தகைய சூழலில், சீன அதிபர் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் முதல்முறையாக ரஷியா தலைநகர் மாஸ்கோவுக்கு சீன அதிபர் செல்லவிருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சீன அதிபர் பயணம்:


"ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மார்ச் 20 முதல் 22 வரை ரஷியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்கிறார்" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் புதின் கலந்து கொண்டார். மேலும், இரு தலைவர்களும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த பிராந்திய பாதுகாப்பு கூட்டத்தில் சந்தித்து பேசினர்.


இதுதொடர்பாக ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வியூக ரீதியான கூட்டாண்மை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.


சர்வதேச அரங்கில் ரஷியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை, வியூக ரீதியான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். முக்கிய இருதரப்பு ஆவணங்களில் கையெழுத்திடப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த மாதம், போரில் தாங்கள் எடுத்துள்ள நிலைபாட்டை விளக்கும் வகையில் சீனா கட்டுரை ஒன்றை வெளியிட்டது. மற்ற நாடுகளின் பிராந்திய இறையாண்மையை மதிக்கும்படி சீனா அதில்  அழைப்பு விடுத்திருந்தது.


சீனாவும் ரஷ்யாவும்  வியூக ரீதியான நட்பு நாடுகளாக திகழ்கின்றன. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், தொலைபேசியில் பேசுவார் என தகவல் வெளியான நிலையில், அந்த செய்தியை சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யவில்லை.


உக்ரைனும் ரஷியாவும் முடிந்தவரை விரைவில் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என சீனாவின் வெளியுறவு அமைச்சர் நேற்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Crime: பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரம்...குடும்பத்தினருக்குக் கொடுத்து அவர்களையும் கொன்ற பயங்கரம்..!