Work From a Pub: மச்சி ஒரு பீர் சொல்லேன் என்பதைப் போல்  லண்டனில் ஒர்க் ஃப்ரம் பப் எனும் முறை ட்ரெண்டாகி வருகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மனிதர்களின் வேலை பார்க்கும் நேரம், வேலை முறை என எல்லாம் மாறிவிட்டது. ஏற்கனவே ஐ.டி துறைகளில் பகல் இரவு என எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் ஒரு நாளுக்கான 24 மணிநேரத்தினை மூன்று எட்டு மணி நேரங்களாகப் பிரித்து வேலை செய்துவருகிறார்கள். ஏற்கனவே இந்த சூழல் இருந்த நிலையில், வேலை செய்பவருக்கு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகம் செல்ல முடியாத நிலையில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் முறை இருந்து வந்தது. அதன் பின்னர் அது இன்றைக்கு ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா கால கட்டம் மற்றும் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் ’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் முறை ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. பல ஐ.டி நிறுவனங்கள் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையினையே தொடரலாம் என நினைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் ப்ரோடக்சன் குறைந்து வருவதாக கூறி பணியாளர்களை மீண்டும் அலுவலகங்களை நோக்கி அழைத்தது. ஆனால் இன்றைக்கும் பல பணியாளர்கள் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் தான் பணியாற்றி வருகின்றனர்.


இப்படியான முறைகள் ஒரு புறம் இருக்க அவ்வப்போது பல ஐ.டி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வேலை செய்யும் போது உற்சாகமாக இருக்க வேண்டும் என பல புதிய புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. ஒரு சில ஐ.டி நிறுவனங்கள் வேலை நேரத்தில் பணியாளர்களுக்கு உறக்கம் வந்தால் உறங்கிவிட்டு வேலை செய்யச் சொல்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு ப்ராஜெக்ட் முடிந்த பின்னரோ சுற்றுலா அழைத்துச் செல்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் பணியாளர்களின் மன அழுத்தம் குறைந்து மீண்டும் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியும் என்கிறனர். 



ஆனால் லண்டனில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனம் தங்களது பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வேலை செய்ய ஒரு புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையினைப் போல் ‘ஒர்க் ஃப்ரம் பப்’ முறையாகும். கேட்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது தானே. ஆனால் இது உண்மை தான். இந்த முறையின் மூலம் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ மற்றும் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்பவர்களுக்கு அலுப்போ, மன அழுத்தமோ ஏற்பட்டால், ‘ஒர்க் ஃப்ரம் பப்’ எனும் முறையினை பயன்படுத்தி வேலை செய்யலாம். இதற்காக இங்கிலாந்தில் உள்ள யங்ஸ் எனும் நிறுவனம் பல பப்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இதனால் பல பணியாளர்கள் தங்களது மன அழுத்தத்தினை போக்கிக்கொள்ள இந்த ‘ஒர்க் ஃப்ரம் பப்’ எனும் முறையினை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 


லண்டனில் உள்ள பப்கள் ’ஒர்க் அண்ட் ப்ளே’ பேக்கேஜ்களை வழங்குகின்றன. அதில், 900 ரூபாய்க்கு மதிய உணவுடன் ஒரு பானத்தையும் (ஒரு பீர்) வழங்குகின்றன. ரூ. 1,300க்கு மதிய உணவு டீ, காபி மற்றும் ஒரு பானத்தையும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே லண்டனுக்கு பறக்க வேண்டும் எனும்  உங்களின் மனக்குரல் கேட்கிறது. 


மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உடலுக்குக் கேடு.