தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய உருமாற்ற ஓமைக்ரான் தொற்று ( பி.1.1529) கவலைக்குரியது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்று பொருள். உலக முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஓமைக்ரான் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தாலும், அதன் தீவிரத்தன்மை தன்மை பற்றி முழுமையாக  தெரியவில்லை என உலக சுகாதார மையம் தற்போது தெரிவித்துள்ளது. 


சமீபத்தில், தென்னாப்பிரிக்காவில் சில இடங்களில் ஓமைக்ரான் தொற்று காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இருப்பினும்,  ஓமைக்ரான் அதன் முந்தைய மாறுபட்ட டெல்டா வகையை விட அதிகம் பரவும் தன்மை கொண்டதா என்பது முழுமையாக தெரியவில்லை.இந்த கூடுதல் பரவலுக்கு ஓமைக்ரானின் தன்மை காரணமா?    அல்லது வேறு சில காரணங்கள் உண்டா என்பதை நோய்ப் பரவலியல் ஆய்வுகளின் அடிபப்டையில் தான் புரிந்துக் கொள்ள வேண்டும். 




ஓமைக்ரான் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. எனினும் தொற்று மிகவும் தீவிரமானது என்பது கூறுவது கடினம். தொற்றால் பாதிக்கப்போட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது ஓமைக்ரானின் தீவிரத் தன்மையும் காரணமாக அமையலாம். சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், ஓமைக்ரானின் நோய்த் தொற்று அறிகுறிகள் டெல்டா வகையோடு ஒத்துப்போகின்றன. 


மேலும், ஓமைக்ரானின் பாதிப்பு தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள், லேசானது முதல் மிதமான பாதிப்புகளைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, தீவிர நோய்த் தொற்று பாதிப்புகள் குறித்து அறிய சில நாட்கள் எடுக்கும். 




எனவே, அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தற்போது வரை தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் தீவிர உடல் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கிறது.  மேலும், மாறுபட்ட கொரோனா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்தால், விரிவான பரிசோதனை கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.                 


தீவிர கொரோனா நோயாளிகளுக்கு Corticosteroids மற்றும் IL6 Receptor Blockers உள்ளிட்ட மருத்துவமுறைகளை மீண்டும் ஒருமுறை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது.