ஃபோனை குனிந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். பேருந்து நிலையம், பஸ், ரயில் பயணம், பார்க், பீச் என எங்கு சென்றாலும் எல்லாவற்றையும் காட்டிலும் ஃபோன் தான் நம்முடன் இணைபிரியாமல் இருக்கிறது. லாக்டவுன் காலத்தில் ஃபோன் பயன்பாடு இன்னும் இன்னும் அதிகரித்துவிட்டது.


பிள்ளைகளுக்கு ஃபோன் கொடுக்காதவர்கள் கூட ஆன்லைன் வகுப்புகளுக்காக பிள்ளைகளுக்கு தனியாக ஃபோன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.


குழந்தைகள் சிறு வயதிலிருந்து ஃபோன் பயன்படுத்துவதால் காலம் செல்லச்செல்ல அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கழுத்து கீழ் நோக்கி வளைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என நரம்பியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பீடிகையெல்லாம் செல்ஃபோனை நடக்கும்போது பயன்படுத்திய நபருக்கு நேர்ந்த இன்னலை எடுத்துரைக்கவே.
துருக்கியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இச்சம்பவத்தை உலகுக்கே அம்பலப்படுத்தியுள்ளது.



அது ஒரு அட்டைப்பெட்டிகளைக் கையாளும் நிறுவனம் போல் தெரிகிறது. இருபுறமும் அட்டைப் பெட்டிகள் பல சைஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நடுவில் நடப்பதற்கு பாதை இருக்க அந்தப் பாதையில் ஒரு இளைஞர் நடந்து வருகிறார். நடந்து வந்தாலும் அவர் பார்வையெல்லாம் ஃபோனில் தான் இருக்கிறது. ஏதே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார் போல. அவர் வாழ்க்கையில் விதி விளையாடி இருக்கும். மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கிறார்.




நடந்து வந்த அவர் வழியில் இருந்த ஒரு குழியில் விழுந்தார். அந்தக் குழியும் அட்டைப் பெட்டிகளை அடுக்கிவைக்கும் குழி தான். அதில் சிலர் பெட்டிகளை உள்ளே வைப்பதற்காக திறந்து வைத்திருக்க அந்த இடைவேளையில் இளைஞர் குழியில் விழுந்தார். அந்தக் குழியின் ஆழத்தைப் பார்த்தால் பதைபதைக்க வைக்கிறது. நல்வாய்ப்பாக அவர் உள்ளே இருந்த சில அட்டைப்பெட்டிகளில் விழுகிறார். விழுந்தவுடன் திரும்பி சுதாரித்து எழுந்துவிடுகிறார்.


அவர் விழுவதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அவரைக் காப்பாற்றி விடுகின்றனர். விநாடிகளில் விபத்து நடந்துவிட்டது.அந்த நேரத்தில் அங்கே ஊழியர்கள் இருந்ததால் அவரைக் கவனித்து காப்பாற்றிவிட்டனர். 


இதுவே அவர் சாலையில் நடக்கும் போது ஏதேனும் மழைநீர் வடிகால் குழியில் விழுந்திருந்தால் என்னவாகும்? நம்மூரில் ரயில்வே பாதையை கடக்கும்போது செல்போனைப் பார்த்து உயிர் துறந்தவர்கள் உண்டு. ரயில்வே இருப்புப் பாதையைக் கடந்து மறுபுறம் செல்வதே தவறு அதிலும் ஃபோன் பார்த்துக் கொண்டு செல்வது மரணத்தை வரவேற்பதற்கு சமம். 
எந்த நாடாக இருந்தாலு, எந்த ஊராக இருந்தாலும் சரி நடக்கும் போது சாலையைப் பார்த்து நடப்போம். இன்னுயிர் காப்போம்.