அமெரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கரடியை கட்டியணைக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


உலகம் முழுவதும் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை தனக்கேற்ப மாற்றிக் கொண்டு நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். போட்டித்தேர்வுகள் தொடங்கி வாழ்நாளில் பல நேர்காணல்களையும் நம் அனைவருமே பார்த்திருப்போம். சிலருக்கு கிடைத்த வேலையானது எதிர்பார்த்த வேலையை விட சிறப்பானதாக அமையும். வித்தியாசமான வேலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களிடத்தில் அமெரிக்காவின்  வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம்  வெளியிட்ட அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. 


அங்குள்ள நியூ மெக்சிகோவில் கணிசமான அளவில் கரடிகள் உள்ளதால் அவற்றை பாதுகாக்க அம்மாகாணத்தில் 1972 ஆம் ஆண்டு விலங்குகளில் பாதுகாப்புக்கான சட்டங்களை அரசு உருவாக்கியது. இதனிடையே அங்கு பாதுகாப்பு நிறுவனமான கேம் அண்ட் ஃபிஷ் துறை கரடி கட்டிப்பிடித்து அரவணைப்பவர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது 


அந்த வகையில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த வேலைக்கு தேவையான தகுதிகளாக கடினமான சூழ்நிலையில் நடைபயணம் செய்யும் திறன், கரடி குகைக்குள் ஊர்ந்து செல்லும் தைரியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்  சக பணியாளர்கள் மீது நம்பிக்கை,தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் இந்த கரடி கட்டியணைக்கும் வேலைக்கான கல்வித்தகுதியாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்கை வள பாதுகாப்பு, உயிரியல் அறிவியல் அல்லது அதுதொடர்பான படிப்புகளில் கல்வி பயின்றதோடு மட்டுமல்லாமல் அனுபவமும் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.