70 ஏவுகணைகள்:


உக்ரைன் மீதான ரஷியா போர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், அக்டோபர் மாதம் தொடங்கி ரஷியா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், போர் தொடங்கிய காலத்திலிருந்து மிக பெரிய தாக்குதலை ரஷியா நேற்று முன்தினம் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 70 ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலைய வைத்துள்ளது.


இதை தொடர்ந்து, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கிவ்வில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி, நாடு முழுவதும் அவசர அவசரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரஷியா மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்து பேசிய உக்ரைன் அதிகாரி ஒருவர், "மத்திய க்ரிவி ரிஹ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தெற்கில் கெர்சனில் வெடிகுண்டு தாக்குதலில் மற்றொருவர் இறந்ததார்" என்றார். உக்ரைன் தாக்குதலில் 12 பேர் இறந்ததாக கிழக்கு உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உக்ரைன் அதிபர் நம்பிக்கை:


ரஷியா தாக்குதலை தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷியா இன்னும் பல பெரிய தாக்குதல்களை மேற்கொள்ள போதுமான ஏவுகணைகளை வைத்துள்ளது. இன்னும் நிறைய வான்வழி ஆயுதங்களை வழங்குமாறு மேற்குலக நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன். போரில் உக்ரைன் மீண்டு வரும் அளவுக்கு பலமாக இருக்கிறது. எந்தளவுக்கு வான்வழி தாக்குதலை ரஷியா நம்பி கொண்டிருந்தாலும், போரின் சமநிலையை அது மாற்றாது" என்றார். அடுத்தாண்டின் தொடக்கத்தில் புதிய அதிரடி தாக்குதலை மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டிருந்ததாக உக்ரைன் எச்சரித்திருந்தது.  


உக்ரைனின் முக்கிய நகரங்களில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குளிர் அங்கு தொடர்ந்து வீசி வரும் நிலையில், மின் நிலையங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் பலத்த வெடிகுண்டு சத்தம் கேட்டதாக கிவ்வில் உள்ள செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


குடியிருப்பாளர்களை நிலத்தடி நிலையங்களில் தங்க அனுமதிப்பதற்காக மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.


வான்வழி தாக்குதல்கள்:


"ரஷியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. மத்திய நகரங்களான பொல்டாவா மற்றும் கிரெமென்சுக் ஆகியவற்றிலும் மின்சாரம் இல்லை. சேதத்தின் அளவு மதிப்பிட்டு வருகிறது. நாடு முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.


பிப்ரவரியில் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு, ரஷியா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். இது உக்ரைனிய எதிர் தாக்குதலின் மையமாக இருந்து வருகிறது. 2014இல் ரஷியா இணைத்து கொண்ட கிரிமியா தீபகற்பத்திற்கான ஒரே நிலப் பாதை, இந்த நகரத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது.