அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.



அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவம். நேற்றைய தினம் அமெரிக்காவின் டெஸ் மொயின்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு  மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து பலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த மூன்று பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களில் இரண்டு மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் இருந்த காரில் இருந்த இருவரை பிடித்தனர். மற்றொருவர் காரில் இருந்து தப்பிச் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் இரண்டு தினங்களுக்கு முன் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலர் கண்டனங்களை தெரிவித்தாலும் துப்பாக்கிச்சூடு நின்ற பாடில்லை. 

சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.


விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. 


இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 


அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.


அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.