ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் நிலையில், போரை நிறுத்த எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த போரை நிறுத்த கடும் முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் எதற்குமே பணியாத புதினுக்கு, தற்பாது ஒரு கெடுவை விதித்துள்ளார் ட்ரம்ப். அது என்ன தெரியுமா.?
“50 நாட்களில் ஒப்பந்தம்.. இல்லையென்றால் 100% வரி“
திங்கட் கிழமை ரஷ்யா குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவிற்கான கெடுவை அறிவித்தார். அதாவது, உக்ரைன் உடனான பிரச்னையை 50 நாட்களில் தீர்க்காவிட்டால், ரஷ்யாவிற்கு 100 சதவீத வரிகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நேற்று, வெள்ளை மாளிகையில், நேட்டோ தலைவர் மார்க் ருத்தே உடனான சந்திப்பிற்குப் பின் பேசிய அவர், ரஷ்யாவின் செயல்களால் மிகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 50 நாட்களில் ரஷ்யா எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றால், அந்நாட்டிற்கான வரிகள் 100 சதவீதம் விதிக்கப்படுவதுடன், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் இரண்டாம் கட்ட வரிகள் விதிக்கப்பட உள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் அவதிப்பட்டுவரும் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் இந்த அறவிப்பை வெளியிடுள்ளார்.
‘நேட்டோ‘வுடன் ஆயுத வர்த்தக ஒப்பந்தம்
இதனிடையே, நேட்டோ கூட்டுப்படைகள், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அப்படி வாங்கப்படும் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை, அந்நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
பில்லியன் கணக்கான மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாகவும், அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களை, ரஷ்யாவுடன் போராடிவரும் உக்ரைனுக்கு விரைவிலேயே வழங்க உள்ளதாகவும் ட்ரம்ப் ரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உக்ரைன் ஏராளமான ஆயுதங்களை பெறும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருத்தே கூறியுள்ளார்.
புதின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ள ட்ரம்ப்
முன்னதாக, நேற்று முன்தினம் புதின் குறித்து பேசிய ட்ரம்ப், அவர் உண்மையாகவே ஏராளமான மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். அவர் நன்றாகவே பேசிவிட்டு, மாலையில் அனைவர் மீதும் குண்டுகளை வீசுகிறார் என விமர்சித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில், ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து பணியாற்றி, போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும், ரஷ்யா எதற்குமே ஒத்துவரவில்லை. இதனால், சமீப காலமாக, புதின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளார் ட்ரம்ப்.
ஏற்கனவே, அதிபர் தேர்தலின்போதே, பதவியேற்ற 24 மணி நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு புதின் ஒரு தடையாக இருப்பதால், அவர் மீது எரிச்சலடைந்துள்ள ட்ரம்ப், தற்போது அவருக்கு கெடு விதித்துள்ளார். இதற்கு புதின் பணிவாரா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.