ஐரோப்பிய நாடுகளில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, வெப்ப அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களின் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.


சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளம் வளைந்து உருகும் அளவுக்கு பிரிட்டனில் மிக அதிக வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. வரலாறு காணாத வெப்ப அலையின் விளைவாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் வளைந்து சேதமானது.


 






வெளிப்புற வெப்பநிலை 40 செல்சியஸ்க்கு மேல் பதிவானதால், புதன்கிழமை அன்று பிரிட்டன் முழுவதும் ரயில் சேவைகள் பெரும் இடையூறுகளை சந்திக்க நேரிட்டது. மேலும், தீவிர காலநிலை காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது.


கொளுத்தி எடுக்கும் வெயில் காரணமாக ரயில் சிக்னல் கருவிகளே உருகி உள்ளது. இச்சம்பவம், உலகெங்கிலும் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. உருகிய ரயில் சிக்னல் கருவிகளின் புகைப்படங்களை தேசிய ரயில்வே ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.


"இன்று கிழக்கு கடற்கரை பிரதான பாதையில் பயணம் செய்வதற்கு முன் உங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்பார்க்கிறோம். பீட்டர்பரோவிற்கும் லண்டன் கிங்ஸ் கிராஸுக்கும் இடையிலான பாதையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு நாங்கள் பாதையை சரிசெய்து வருகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


 






சாதாரண நாட்களில் சுமார் 30,000 கிமீ வரை ரயில் இயக்கப்படும் என ரயில்வே சாரிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செவ்வாய்கிழமை அன்று 9 கி.மீ மட்டுமே ரயில் இயக்கப்பட்டது.


கிரேட்டர் மான்செஸ்டரின் சில பகுதிகளில், அதிக வெப்பநிலை சாலைகளை உருக வைத்தது. மேற்பரப்பு வெப்பநிலை 54 செல்சியஸை தாண்டியதால் லிங்கன்ஷையரில் உள்ள சாலைகளும் உருகத் தொடங்கியது.


பிரிட்டனில் அனல்காற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.