நம் வீட்டு குழந்தைகள் சேட்டை செய்தால் வாலு பையன் என்று கூறுவோம், ஆனால் சேட்டை ஏதும் செய்யாமலே ஒருவர் வாலு பையனாக மாறிய சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது. 16 வயது ஆண் ஒருவருக்கு வால் போல பின்னால் 70 சென்டிமீட்டர் அளவிற்கு முடி முளைத்துள்ளது. அதனை பார்த்த சாமியார் ஒருவர் அவரை ஆஞ்சநேயர் அவதாரம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


முடி வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உலகெங்கும் நாம் கண்டுகொண்டிருக்கிறோம். ஆனால் முடி வளர்கிறது என்று வருத்தப்பட்ட ஒருவரை ஒரு சாமியார் ஒரே வார்த்தையில் பெருமை கொள்ள செய்து வருத்தத்தை நீக்கி இருக்கிறார். நேபாள நாட்டை சேர்ந்த தேஷாந்த் அதிகாரி என்ற 16 வயது இளைஞருக்கு அடி முதுகில் வால் போல் முடி வளர்ந்துள்ளது. முடி வளர்வதை பிறந்ததும் அறிந்த பெற்றோர்கள் பல மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அதனால் எந்த பயனும் அவருக்கு ஏற்படவில்லை. அந்த சிறுவன் வளர வளர இதனை ஒரு அவமானமாக கருதி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். பல மருத்துவர்களை பார்த்த பிறகும் என்னவென்றே தெரியாததால் வெளிநாடுகளுக்கு கூட அழைத்து சென்று காண்பித்துள்ளனர்.



ஏதேதோ மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் முடி வளர்வதை நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அவர்களது ஊரில் உள்ள ஒரு சாமியாரை சென்று சந்தித்துள்ளனர். அவர் இதனை பார்த்துவிட்டு இந்த மனிதர் ஆஞ்சநேயரின் அவதாரம் என்று கூறியிருக்கிறார். அவர் அப்படி கூறியதை அடுத்து அந்த இளைஞர் பின்னால் வளரும் முடியை பெருமையாக எண்ணத் துவங்கி உள்ளார். இதனிடையே அவருக்கு வளரும் முடி குறித்த டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாகி பலரும் அவரை அனுமாரின் அவதாரம் என்று கூற, இப்போது அதனை வெளி உலகிற்கு காண்பிப்பதில் இருந்த கூச்சம் விலகி பெருமை கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய தேஷாந்த், "எனது வீடியோ டிக்டாக்கில் வந்ததில் இருந்து பலரும் என்னை 'வால் உள்ள பையன்' என்று அறிந்துகொள்கின்றனர், நான் பலருக்கும் தெரிந்த மனிதனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்", என்று கூறுகிறார்.



இவரின் இந்த வாலை பற்றி ஆவணப்படம் எடுத்த திரைப்பட இயக்குனர் புஷ்கர் நேபாள் என்பவர் கூறுகையில், "இவரது பெற்றோர்கள் இவரை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்கையில் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உள்ளூர், வெளியூர் என எவ்வளவு மருத்துவர்களை பார்த்தபோதும் வாலின் வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. பிறகு ஒரு சாமியாரை பார்த்ததும் அவர் அந்த முடியை சீப்பு வைத்து நேர்படுத்தவோ, ஏதேனும் பொருள் வைத்து வெட்டவோ வேண்டாம், இது பின்னால் பெரிய விஷயமாக மாறலாம் என்று கூறி இருக்கிறார். மேலும் அவர் கடவுள் அனுமாரின் மறுபிறவியாக கூட இருக்கலாம் என்று கூறியதை நம்பிய பெற்றோர்கள் அதனை அப்படியே விட்டுள்ளனர். அந்த வால் தற்போது வளர்ந்து 70 செ.மி. ஆக உள்ளது." என்று குறிப்பிட்டார்.