ஆஸ்திரேலியாவில் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்ட்டில் உள்ள கிராம கவுன்சில் ஒன்று நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் டாக்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.


சாதாரண பணி அறிவிக்கை என்று நினைத்துவிட வேண்டாம். அந்தப் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பளம் தான் ஹைலைட்.. ஆம், அவ்வாறு வருபவர்களுக்கு மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6 கோடியே 56 லட்சம் வழங்கப்படும். கூடவே வாடகையே இல்லாமல் 4 அறைகள் கொண்ட வீடு தங்குவதற்கு வழங்கப்படும். ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி கோதுமை வயல்கள் நிறைந்த பகுதி. அங்குள்ள குவாய்ராடிங் என்ற பகுதியில் தான் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த குறிப்பிட்ட நகருக்கு ஒரு நிரந்தர மருத்துவரை பணிக்கு அமர்த்த அரசு முயன்று வருகிறது. எதுவும் பலிக்காததால் தற்போது கண்கவர் போனஸ், இன்சென்டிவ் இத்யாதி சலுகைகளை அறிவித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.6.5 கோடி சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு வரும் டாக்டர் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்தால் அவருக்கு கூடுதலாக 9.94 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் போனஸாக ரூ.19.05 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த கிராமத்தில் மொத்தமே 619 பேர் தான் இருக்கின்றனராம். அத்தனைபேரும் கிராமவாசிகள். அவர்களுக்காகவே அரசாங்கம் இந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த ஊரில் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான ஊர்களிலும் பொது மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. சில நகரங்களில் நிரந்தர டாக்டர் இல்லாததால் மருத்துவ மையங்கள் மூடப்பட்டுள்ளன. 


குவாய்ராடிங் பகுதியின் தலைவர் பீட்டர் ஸ்மித், ஒரு கிராமமே மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அதற்காக என்ன விலை கொடுத்தாவது ஒரு டாக்டரைப் பெறுவதே எங்களின் இலக்கு என்று கூறியுள்ளார். இப்போதைக்கு மேற்குப் பகுதி நகரங்களில் விளம்பரம் கொடுத்துள்ளோம். அங்கிருந்து யாரும் வேலைக்கு வர முன்வராவிட்டால் கிழக்குப் பகுதியிலும் விளம்பரம் கொடுப்போம் என்றார்.


ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய புள்ளிவிவரத்தின்படி ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ மாணவர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே பொது மருத்துவராக விரும்புகின்றனர். அதிலும் வெறும் 4.5 சதவீதம் பேர் மட்டுமே குவாய்ராடிங் போன்ற சிறு கிராமங்களில் பணி செய்ய முன் வருகின்றனர் என்பது தெரிகிறது.


ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை மிகவும் குறைவு. 2013 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த நாட்டில் 23 கோடி பேர் தான் இருக்கின்றனர். இது அண்மை கணக்கெடுப்பை சேர்த்தால் 30 கோடியைத் தாண்டாது எனக் கூறுகின்றனர். இதனாலேயே அங்கே பல்வேறு பணிகளுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. வெளிநாட்டவர் நிறைய பேர் வேலை செய்கின்றனர்.