வட கொரியாவில் வினோதமான உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, "bomb", "gun" மற்றும் "satellite" போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட  வட கொரிய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், மென்மையான பெயர்களை வைக்க அரசு கட்டுப்பாடு வதித்திருந்தது.


வினோதமான உத்தரவு:


தென் கொரியாவைப் போலவே, ஏ ரை (அன்பானவர்), சு மி (சூப்பர் அழகு) போன்ற அன்பான பெயர்களைப் குழந்தைகளுக்கு சூட்ட வட கொரியாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அனுமதித்து வந்தது. ஆனால், இந்த வகை பெயர்களை கொண்ட மக்கள், தங்களின் பெயரை தேசி பக்தி மற்றும் கொள்கை சார்ந்த பெயர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டது.


இந்நிலையில், புதிய வினோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது வட கொரிய அரசு. அதன்படி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின் மகளின் பெயரை வைத்திருக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள், தங்களின் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


அதிபரின் மகள் பெயரை சூட்டக் கூடாது:


கிம் ஜாங் உன்னின் மகளின் பெயர் ஜூ யே. அவருக்கு 9லிருந்து 10வயது வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.  நாட்டின் பிற பெண்கள் மற்றும் சிறுமிகளில் இருந்து அதிபரின் மகளை வேறுபடுத்தி தனித்துவமாக காட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இம்மாதிரியான உத்தரவை வட கொரியா விடுத்திருப்பதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு பியாங்யாங்கில் வசிக்கும் ஒருவர், தெற்கு பியாங்யாங்கில் வசிக்கும் ஒருவர் இது தொடர்பாக தங்களுக்கு தகவல் அளித்ததாக ஃபாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.


அவர்கள் அளித்த தகவலின்படி, ஜூ யே என பெயர் கொண்டவர்கள், தங்களின் பிறப்பு சான்றிதழில் பெயரை மாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


நேற்று, ஜியோங்ஜு நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், ஜூ யெ என்ற பெயரில் இருக்கும் பெண்களை அழைத்துள்ளது. அவர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் பெயரை மாற்ற வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜூ யெ என்ற பெயர் மிக உயர்ந்த கண்ணியம் கொண்டவர்களுக்கு மட்டுமே வைக்க வேண்டும் என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஜு யெ, சமீபத்தில் வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பின் போது தனது தந்தையுடன் பொது மக்கள் முன்பு தோன்றினார். அணிவகுப்புக்கு ஒரு நாள் முன்பு, அவர் ராணுவ முகாமில் வைக்கப்பட்ட ஆடம்பரமான விருந்திலும் கலந்து கொண்டார். அவர் முதன்முதலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.


இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் கிம்மின் மூன்று குழந்தைகளில் இவர் மட்டுமே பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு கிம் தனது மனைவியான ரி சோல் ஜுவை மணந்தார் என்றும் அவர்களுக்கு மூன்று குழந்தைகள், அதாவது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் கூறுகின்றன.


வடகொரியா தனது தலைவர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்பங்களின் பெயர்களையே மக்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.