சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒருவர் பாம்பு ஒன்றை பிடிக்கும் காட்சி வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ராஜ நாகம் ஒன்றை அசத்தலாக கையில் பிடிக்கும் காட்சி காண்போரை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தாய்லாந்து நாட்டின்  தெற்கு கர்பி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி அந்தப் பகுதியில் ஏஓ நாங் என்ற பகுதியில் சுமார் 14 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் ஒன்று புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பாம்பை பிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த பாம்பு வயல் வழிகளில் தப்பி அருகே இருந்த ஒரு செப்டிக் தொட்டியில் பதங்க முயன்றுள்ளது. அப்போது நய்வாத் என்ற 40 வயது மதிக்க தக்க நபர் அந்த ராஜ நாகத்தை வயல் நிலத்திலிருந்து சாலைக்கு லாவகமாக அழைத்து வந்துள்ளார். 



அதன்பின்னர் சாலையில் வைத்து அந்த ராஜ நாகத்தை பிடிக்க முயற்சி செய்துள்ளார். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த ராஜ நாகத்தை அவர் கையில் அசத்தலாக பிடித்துள்ளார். அத்துடன் அந்த நாகத்தை காட்டுப்பகுதிக்குள் விட்டுள்ளார். அந்த ராஜ நாகம் தன்னுடைய ஜோடி நாகத்தை தேடி ஊருக்குள் வந்துள்ளது என்றும் அதை பிடித்த நபர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் இந்த ராஜ நாகத்தின் ஜோடி நாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதி மக்கள் அடித்து கொன்றுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த ராஜ நாகம் ஊருக்குள் வந்துள்ளதாக தெரிகிறது. 


மேலும் இந்த நாகத்தை பிடித்தவர் யாரும் இதை பின்பற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால் அவர் நீண்ட ஆண்டுகள் பயிற்சி எடுத்த பிறகு தான் இதை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் யாரும் எந்தவித பயிற்சியும் இல்லாமல் இதை பின்பற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். 


ராஜ நாகம் என்பது உலகிலேயே மிகவும் கொடிய விஷத்தை கொண்ட பாம்பு. இந்த பாம்புகள் பொதுவாக 10 முதல் 13 அடி வரை நீளமாக இருக்கும். அத்துடன் இவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாக காணப்படும். உலகிலேயே மிகவும் நீளமாக ராஜ நாகம் தாய்லாந்தில் தான் உள்ளது. அந்த ராஜ நாகம் 18 அடி மற்றும் 4 இன்ச் நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நமத்துப்போன சாக்ஸ் பொம்மைதான் ஜோ பைடன்.. அமெரிக்க அதிபரை விமர்சித்த எலான் மஸ்க்..