சமீபத்தில் சில ஆண்டுகளாக பெருநிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நிறுவனங்கள் குறைவான பணியாளர்களுக்கு அதிக பணியை வழங்கி வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பனிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.


காதலருடன் சுற்ற சம்பளத்துடன் விடுமுறை:


உலகெங்கும் வெளியாகும் பல ஆய்வறிக்கைகளும் பணியாளர்கள் கடும் மன அழுத்தத்தில் பணியாற்றுவதாகவே தெரிவிக்கின்றன. இது அவர்களின் மன நலனுக்கும், உடல்நலனுக்கும் ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில், பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக தாய்லாந்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.


தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒயிட்லைன் குரூப்ஸ். நிறுவனம். கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 200 ஊழியர்களுடன் பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இந்த நிறுவனம் பணியாளர்கள் தங்கள் காதலன் அல்லது காதலியுடன் நேரத்தை செலவிட விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறைக்காக அந்த நிறுவனம் ஊதியமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பணிச்சுமை:


இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த சலுகையை இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அளித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ஒரு தனியார் டேட்டிங் செயலியுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விடுமுறையை டிண்டர் விடுமுறை என்றும் அறிவித்துள்ளனர். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலமாக மன அழுத்தம் குறைவதுடன் பணிச்சுமை பற்றிய எண்ணங்களே இருக்காது என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, அந்த நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியாளர்களுக்கு பணிச்சுமையை குறைப்பதற்காக இந்த நிறுவனம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற நிறுவனங்களும் தங்களது பணியாளர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.