ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தாலிபான் அமைப்பு கைபற்றியது. இதன்மூலம், ஆப்கான் நாட்டின் அதிகாரப்புள்ளியாக தாலிபான் உருவெடுத்துள்ளது. 


எனவே, ஆப்கான் சந்திக்கும் பிரச்சனை என்ன? தலிபான் அமைப்பின் வளர்ச்சி என்ன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கானப் பதலை இங்கே காண்போம்.                


பிரச்சனையின் தீவிரத்தன்மை என்ன? 


இதற்கு, அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உலகில், அனைத்து வகையான இஸ்லாமிய மார்க்கங்களையும் கொண்ட நாடு பாகிஸ்தான். எது உண்மையான இஸ்லாம் என்ற கோட்பாட்டுச் சண்டையில்  பாகிஸ்தானில் மோதல் போக்கு காணப்படுகிறது. ஆனால், ஆப்கானில் அத்தகைய பிரச்சனையில்லை. தாலிபான்கள் கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த ஆப்கான் உள்நாட்டு பழங்குடிகளான பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர். அந்நாட்டின் முன்னாள் அதிபரான ஹமித் கர்சாய் கூட இதே பிரிவைச் சேர்ந்தவர் தான். எனவே, ஆப்கானில் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றளவில் தான் மோதல் போக்கு இருந்தது.   



கிட்டத்தட்ட 300 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஆப்கான் நாடு பிளவுப்படாமல் தான் இருந்தது. அதன் பாரம்பரிய பழங்குடியன கட்டமைப்பை யாராலும் தகர்க்க முடியவில்லை. உதாரணமாக,  1947ல் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பிரிவினை  போன்ற கொடுமையான சம்பவங்கள் அங்கு நடைபெறவில்லை. பிரச்சனைகளை கலந்து பேசி தீர்ப்பதற்கான சுய கட்டுப்பாடு அதனிடத்தில் இருந்து வந்தது.  


பின் ஏன் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க வேண்டும்: 


1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற பனிப் போர் தான் ஆப்கான் பிரச்சனையை பூதாகரமாக்கியது. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றுவதற்காக முஜாஹிதீன்கள் என்ற தாக்குதல் படையை 
அமெரிக்கா உருவாக்கியது. மேலும், பிரித்தாளும் கொள்கையின் மூலம் ஆப்கானின் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் போன்ற பல்வேறு குழுக்களிடையே பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தியது. 90களில் சோவியத் படை வெளியேற்றப்பட்ட பிறகு, அமெரிக்கா தனது இருத்தலை குறைத்துக் கொண்டது. இதனையடுத்து, ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவானது தான் தாலிபான் அமைப்பு. 



  1. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுதல்; 

  2. ஆயுதங்களை கைவிடுதல் 

  3. தியோபந்தி கருத்துகள் அடிப்படையில் ஷ்ரியா சட்டத்தை அமல்படுத்துதல்   


போன்ற மூன்று கொள்கையைத் தான் 90களில் தாலிபான் முன்னெடுத்தது.  


இரான் முக்கிய காரணி: சர்வதேச அளளவில் அமெரிக்க வல்லரசை நேரடியாக எதிர்க்கும் ஒரே இஸ்லாமிய நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் சன்னி இஸ்லாத்தை கடைபிடிக்கும் மக்கள் இருந்தாலும், மற்றொரு உட்பிரிவான ஷியா இஸ்லாத்தின் கோட்டையாக அந்நாடு உள்ளது. தாலிபான்கள் பெரும்பாலானோர் சன்னி இஸ்லாத்தை சேர்ந்தவர்கள். 90களில் சன்னி  இஸ்லாத்தின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த இரான் ஆப்கானை ஆக்கிரமிப்பு செய்தது. எனவே, ஈரானுக்கு எதிராக தாலிபான் அமைப்பு வளர வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. 


தாலிபான் ஆட்சி: கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த தாலிபான், 1996 இல் காபூலைக் கைப்பற்றிய தாலிபான், 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. 2001ல் அமெரிக்காவில் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஆப்கான் மீது அமெரிக்கா போர் அறிவித்தது. இதில், பல தாலிபான் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன.           


2001 முதல் 2021 வரை:  20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் இருத்தலை அமெரிக்காவால் நீக்க முடியவில்லை. இந்த 20 ஆண்டுகால வாழ்கையில் ஒருமுறை கூட அமெரிக்கா ராணுவத்தை தாலிபான்களால் தோற்கடிக்கப்படிக்க முடியவில்லை. மிகப்பெரிய போர் யுத்தமும் அதனிடமில்லை. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்புதான் தாலிபானின்    ஆதிக்கம் தொடங்கியது.       


எதிர்காலம் என்ன? 


தாலிபான் அமைப்பிடம் பெரிய பொருளாதாரம் மற்றும் சமூகம் அமைப்புகளை உருவாக்குவதற்கான கொள்கைகள் இருப்பதாக தெரியவில்லை. உதாரணாக, விடுதலைப் புலிகளை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் தெளிவான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் காணப்பட்டது.  மேலும், ஆப்கான் நாட்டில் பட்டாணியர்கள் (Pashtuns) இனக்குழுவைத் தாண்டி பல்வேறு இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். எனவே, நாளடைவில் உள்நாட்டு மோதல்கள் ஏற்படக் கூடும் என்று கணிக்கப்படுகிறது.              


உயர்க்கல்வி முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள்,  தீவிரவாத பணிகளுக்கு இழுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.        மேலும், ஆங்கில அறிவுள்ள கணிசமான நடுத்தர வகுப்பினருக்கும் தாலிபான்களின் ஆக்கிரமிப்புக் குறித்து கவலையடைந்துள்ளனர். அதிலும், குறிப்பாக பெண்களுக்கான அடிப்படை சுதந்திரம் மறுக்கப்படும் சூழல் உள்ளது.