Hinduja Family: வீட்டு வேலையாட்களின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை:


வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து சுவிட்சர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ததாகவும், அவர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாயில் ஊதியம் கொடுத்ததாகவும், வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் தொழிலாளர்களை துன்புறுத்தியதற்காகவும், அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பை வழங்கியதற்காகவும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660:


குறிப்பிட்ட பணியாளர்களின் வேலைக்கு சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டதும், குறைந்த சுகாதார நலன்களை வழங்கியதும் விசாரணையின் முடிவில் உறுதியாகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாதத்தின் போது, அவர்கள் வீட்டு நாய்க்கு ஆண்டிற்கு 8 லட்ச ரூபாயை ஹிந்துஜா குடும்பத்தினர் செலவு செய்வதாகவும், ஆனால் பணியாளர்களிடம் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை வாங்கி வெறும் 660 ரூபாயை மட்டுமே ஊதியமாக வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதன் முடிவில் குற்றவாளிகளை "சுயநலவாதிகள்" என்று நீதிமன்றம் சாடியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பணியாளர்களுடன் ஹிந்துஜா குடும்பம் சமரசம் செய்துகொண்டாலும், தொழிலாளர் நலன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


18 மாதங்கள் தண்டனை நிறுத்தி வைப்பு:


குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த தண்டனையை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துஜா குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹிந்துஜா குடும்பத்தின் வணிக சாம்ராஜ்ஜியம்:


ஹிந்துஜா குழுமம் 1914 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது.  ஆரம்பத்தில் ஷிகர்பூர் (தற்போதைய பாகிஸ்தான் ) மற்றும் இந்தியாவின் பம்பாயில் இயங்கி , 1919 இல் ஈரானில் நிறுவனத்தின் முதல் சர்வதேச செயல்பாட்டை தொடங்கியது. குழுமத் தலைவர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர் கோபிசந்த் , 1979 இல் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்துவதற்காக லண்டனில் குடியேறினர். மூன்றாவது சகோதரர் பிரகாஷ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழுமத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். இளைய சகோதரர் அசோக் இந்திய நலன்களை மேற்பார்வையிடுகிறார்.


ஆட்டோமொபைல் , எண்ணெய் மற்றும் சிறப்பு ரசாயனங்கள், வங்கி & நிதி , IT மற்றும் ITeS, இணைய பாதுகாப்பு , சுகாதாரம் , வர்த்தகம் , உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , சக்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் ஹிந்துஜா குழுமம் பரந்து விரிந்துள்ளது. இங்கிலாந்தின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக ஹிந்துஜா உள்ளது. 38 நாடுகளில் வணிகங்களை நடத்து, ஹிந்துஜாக்களின் சொத்து மதிப்பு சுமார் 47 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.