இலங்கைச் சட்டத்தின் அடிப்படையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் அனுமதி உள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 


நாட்டின் அமைப்பில் சில  மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் போராட்டத்தை தான் ஏற்றுக் கொள்வதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு சென்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


 

மேலும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தத் தருணத்தில் தான் அதிபராக பதவியேற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார சவால்களைத் தாண்டி இலங்கையை சீர்செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

 



 

ஏற்கெனவே இலங்கை அதிபர் ரணில்  விக்ரமசிங்க மீது எதிர்க்கட்சிகளும், பொது மக்களும், உலக நாடுகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை ராணுவத்தினரை ஏவி விட்டு கலைத்ததாக அவர் மீது ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் அந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், ஏற்பாட்டாளர்கள் என  தற்போது ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென இலங்கை அதிபர் ரணில் அனைவருக்கும் அமைதி வழியில் போராட சட்டம் உண்டு என தற்போது தெரிவித்துள்ள நிலையில், தற்போது கொழும்பின் பல்வேறு பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.