சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   


சிங்கப்பூர் அதிபர் தேர்தல்:


சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வரும் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம், வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில், சிங்கப்பூர் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் விலகியுள்ள நிலையில், தமிழரான தர்மன் சண்முக ரத்னத்திற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.


சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வந்தது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அதிபர் தேர்தல் நடைபெறுவதால் உலக நாடுகளின் கவனத்தை சிங்கப்பூர் அதிபர் தேர்தல் ஈர்த்துள்ளது.


மும்முனை போட்டி:


தமிழரான தர்மனை தவிர, நாட்டின் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்ய இருந்த தேர்தலில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி எங் கோக் சாங், NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் ஆகியோர் தேர்தல் களத்தில் இருந்தனர். சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ஒன்றும் எளிதல்ல. அதில், போட்டியிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கடுமையான விதிகளும் உள்ளன.


சிங்கப்பூர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்:


இதற்கு முன்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் சிங்கப்பூருக்கு அதிபராக பதவி வகித்துள்ளனர். எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன், 2009ஆம் ஆண்டு, பெஞ்சமின் ஷீரஸை தோற்கடித்து அதிபராக தேர்வானார். சிங்கப்பூரின் நீண்ட காலமாக அதிபர் என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர், அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார். 


சிங்கப்பூரின் மூன்றாவது அதிபரான தேவன் நாயர், 1981ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை, தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை அதிபராக பதவி வகித்தார். 1923இல் மலேசியாவின் மலாக்காவில் பிறந்த இவர், கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த ஒரு ரப்பர் தோட்ட எழுத்தரின் மகனாவார். இவரின் உண்மையான பெயர் செங்கரா வீட்டில் தேவன் நாயர்.


சிங்கப்பூரின் பல இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் தொகையில் சுமார் 75 சதவிகிதத்தினர் சீன மக்கள். 13.5 சதவிகிதத்தினர் மலாய் இனத்தவர். 9 சதவிகிதத்தினர் இந்தியர்கள் ஆவர்.