மத்திய கிழக்கில் அமைந்துள்ள சவுதி அரேபியா, ஆசியாவின் ஐந்தாவது பெரிய நாடாகும். அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இறையாண்மை கொண்ட அரபு நாடான சவுதி அரேபியாவின் அதிதாரப்பூர்வ மதம் இஸ்லாம் ஆகும். அங்குள்ள மக்களில், 93 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள்.


பண்டிகை காலமான ரமலான்:


இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை காலமான ரமலான், வரும் 22-ஆம் தேதி சவுதி அரேபியாவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அங்கு பல்வேறு விதமான விதிகள் கொண்டு வரப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மசூதிகளில் ஒலிபெருக்கிகளின் ஒலியின் வரம்பை குறைத்தல், நன்கொடைகளை கட்டுப்படுத்துதல், மசூதிகளுக்குள் தொழுகைகளை ஒளிபரப்புவதை தடை செய்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


கடும் கட்டுப்பாடுகள்:


இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டுதல்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லதீஃப் பின் அப்துல்லாஜிஸ் அல்-அல்-ஷெய்க், நேற்று இது தொடர்பாக உத்தரவை பிறப்பித்தார். அதில், ரமலான் மாதத்தில் சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய 10 அம்ச வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, மசூதிகளில் தொழுகை செய்பவர்களுக்கு உணவு வழங்க மசூதி நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய உணவுகள் தயாரிக்கப்பட்டு மசூதிக்குள் அல்லாமல் மசூதி முற்றங்களில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்க வேண்டும்.


இமாம் (இஸ்லாமிய வழிபாட்டுச் சேவைகளை வழிநடத்துபவர்) மற்றும் முஸ்ஸின் (மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தினசரி தொழுகைக்கான அழைப்பை அறிவிக்கும் அதிகாரி) ஆகியோரின் பொறுப்பில் உணவு வழங்க வேண்டும்.


குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை:


அதி தீவிர அவசிய காலத்தை தவிர்த்து, மற்ற எல்லா நேரங்களில் இந்த மாதம் முழுவதும் இந்த இரண்டு அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும். மாலை நேரத்தில் தொழுபவர்களுக்கும் இரவு நேரத்தில் தொழுகைகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போதுமான நேரத்துடன் தொழுகையை முடிக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மசூதிகளுக்குள் தொழுகை மற்றும் வழிபாட்டாளர்களின் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கு புகைப்படம் எடுப்பது மற்றும் கேமராக்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாடு செய்பவர்கள் குழந்தைகளை மசூதிகளுக்கு கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முந்தைய ஆண்டுகளை போலவே, தொழுகைக்கான அழைப்பை வெளியிடும் ஒலிபெருக்கிகளின் ஒலி வரம்பை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதியைப் பற்றிய பயனுள்ள புத்தகங்களைப் படிக்க வழிபாடு செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.


எழும் கடும் விமர்சனம்:


இந்த சர்ச்சைக்குரிய கட்டுப்பாடுகள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடமிருந்து விமர்சனங்களை பெற்றுள்ளன. இந்த வழிகாட்டுதல்கள், பொது வாழ்வில் இஸ்லாத்தின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் சவுதி அரசாங்கத்தின் முயற்சிகள் என விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.