உக்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்த தேவையில்லை என்றும், உக்ரனை அழிக்க ரஷியா நினைக்கவில்லை என்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்துள்ளார். 


கஜகஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விளாடின்மிர் புதின், இரண்டு வாரங்களுக்குள் ரஷிய ராணுவத்திற்கு விடுத்த அழைப்பு முடிந்துவிடும் என்றும், மேலும் அணி திரட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்ற ரஷிய அரசின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்த அவர், அதில் உக்ரைன் கலந்து கொள்ள விரும்பினால் சர்வதேச மத்தியஸ்தம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


 






உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதினின் தொனி மென்மையாகி இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, சமீக காலமாக, போரில் ரஷியா மிக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் சமயத்தில், இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை பொழிந்தது. இதில் சிக்கி அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, அதில், உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன.


இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே உக்ரைனில் உள்ள நகரங்களில் குண்டு மழை பொழியப்படுவதாக கருதப்படுகிறது.  உக்ரைன் மீது குறைந்தபட்சம் 75 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பாக, தலைநகர் கீவ் மற்றும் தெற்கு மற்றும் மேற்க நகரங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப வாரங்களில் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்ட பிறகு, தலைநகரின் மீதான மிகத் தீவிரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.