22-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர்  மோடி , நேற்று ரஷ்யா சென்றடைந்தார். 


ரஷ்ய உயரிய விருது:


பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் அப்போஸ்தலின் விருதை வழங்கினார் ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின்.


அப்போது, விருது மாலையை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அணிவித்தபோது, அரங்கில் இருந்த ரஷ்ய அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.






ரஷ்யாவில் இந்தியர்களுடன் பிரதமர்:


இதற்கு முன்பு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர்  நரேந்திர மோடி கலந்துரையாடினார். 


அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை மேம்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டினார். 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தச் சமூகத்தினருடனான தமது கலந்துரையாடல் சிறப்பு வாய்ந்தது என்றும், தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பதவிக்காலத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் ஆற்றிய முதல் உரை இது என்றும் குறிப்பிட்டார்.


உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்:


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெளிப்படையான மாற்றம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார். இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். தமது மூன்றாவது பதவிக் காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதே அரசின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.


உலக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை பங்களிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் பேசினார். அதன் டிஜிட்டல் மற்றும் ஃபின்டெக் வெற்றி, அதன் பசுமை வளர்ச்சி சாதனைகள், அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக - பொருளாதாரத் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. 1.4 பில்லியன் இந்தியர்களின் அர்ப்பணிப்பு, பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது முதல் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது வரை, இந்தியா தனது உறுதியான முயற்சிகள் மூலம், உலகளாவிய செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.


உலகின் நண்பன் என்ற முறையில். உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க அமைதி, பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்திற்கான இந்தியாவின் அழைப்பு அதிக அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


ரஷ்யாவுடன் வலுவான நீடித்த கூட்டணியை உருவாக்குவதில் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். கசான், எகடெரின்பர்க் ஆகிய இரண்டு இடங்களில் புதிய இந்திய தூதரகங்களைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த அறிவிப்பு பலத்த கரவொலியுடன் வரவேற்கப்பட்டது.  நாட்டில் இந்திய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதன் துடிப்பை ரஷ்ய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும், சமூகம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.