இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்துள்ளனர். 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார். 






ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே எரிபொருள் மீதமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. முன்னதாக அங்கு எரிபொருள் பிரச்னையை சமாளிக்க இந்தியா 4 முறை பெட்ரோல், டீசல் அனுப்பியிருந்தது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நடந்தே பல கிலோமீட்டர் தூரம் சென்று வருகின்றனர். ஆனாலும் மக்கள் போராட்டம் அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. 


இதனிடையே இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பிஓடினார்.






இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் கோத்தபய ராஜபக்ச அச்சத்திற்கு ஆளாகினார். அங்கிருந்து, ஆம்புலன்ஸ் ஒன்று மூலமாக அவர் தப்பியோடியதாக ஒரு தகவலும், அவர் நேற்று இரவு உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து ராணுவ தலைமையகத்திற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் அங்கு உச்சக்கட்டம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண