கடந்த சில நாட்களுக்கு முன்பாக இணையத்தை மிகவும் பேசு பொருளாக அமைந்தது தென்னாப்பிரிக்க பெண் ஒருவரின் பிரசவ செய்தி தான். அந்தப் பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று உலக சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தச் செய்தி உலகளவில் மிகவும் பிரபலம் அடைந்தது. இணையத்திலும் அதிக ஆச்சரியத்துடன் இச்செய்தி பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது அந்த செய்து தவறு என்றும் அப்பெண் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பகுதியைச் சேர்ந்தவர் கோஷியாமே தாம்ரா சிதோலே(37). இவருக்கும் இவருடைய காதலர் சொட்டாச்சிக்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளது தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க சுகாதார துறையினர் இந்த பிரசவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இதற்காக பிரிட்டோரியாவிற்கு சென்று சிதோலேவிடம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.


அத்துடன் அதிகாரிகள் அவரை மருத்துவரை வைத்து பரிசோதனை செய்து பார்த்தப்போது சமீபத்தில் சிசேரியன் பிரசவம் நடைபெற்ற தழும்புகள் எதுவும் இல்லை. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை அதிகாரிகள் கைது செய்து மனநல சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிதோலேவின் வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.  அதில், “சிதோலேவை அவருடைய விருப்பத்திற்கு மாறாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற என்னையும் அவரை பார்க்கவிடாமல் செய்தனர்” எனக் கூறினார். 




மேலும் இது தொடர்பாக அப்பெண்ணின் காதலர் சொட்டாச்சி, “நான் சிதோலே இடம் குழந்தைகள் எங்கு இருக்கிறது. நான் பார்க்கவேண்டும் என்று பல முறை கேட்டேன். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளிபடையாக தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக நான் தவறான செய்தி வெளியிட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். 


தென்னாப்பிரிக்கா சுகாதார துறை சார்பில் பிரிட்டோரியாவில் உள்ள மற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த பிரசவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. எனினும் அதிலும் இது தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று சுகாதார துறை கூறியுள்ளது. இதற்கு முன்பாக ஒரே பிரசவத்தில் மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் 9 குழந்தைகள் வரை பெற்று இருந்தது உலக சாதனையாக கருதப்பட்டது. அந்தச் சாதனையை சிதோலோ முறியடித்தாக கூறப்பட்டது. எனினும் அதில் உண்மை எதுவும் இல்லாத காரணத்தால் ஹலிமா சிஸ்ஸேவே ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்ற நபர் என்ற சாதனையை தக்கவைத்துள்ளார். 


மேலும் படிக்க: உசைன் போல்ட்டுக்கு இரட்டைக் குழந்தைகள்! - ரசிகர்கள் உற்சாகம்