சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார்.


இருநாடுகளுக்கிடையே வார்த்தை போர் வெடித்துள்ள நிலையில், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஷாஜியா மேரி, இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். 


இந்தியாவுக்கு அணுகுண்டு எச்சரிக்கை


பிலாவல் பூட்டோவுக்கு ஆதரவாக செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பேசிய அவர், "பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. எமது அணு ஆயுதம் அமைதியாக இருப்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் பின்வாங்க மாட்டோம்" என்றார்.


இது இருநாடுகளுக்கிடையே இது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், "உணர்வுகளை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த இந்திய அமைச்சருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது" என ட்விட்டரில் ஷாஜியா மேரி பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, பிலாவல் பூட்டோவின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இது தரம் தாழ்ந்த கருத்து. நாகரீகமற்ற வெளிப்பாடு. லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, ஒசாமா பின்லேடனை தியாகி என்று போற்றும் நாடு பாகிஸ்தான்.  


பிலாவல் பூட்டோ சர்ச்சை:


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் விரக்தி மனநிலை, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நாட்டின் கொள்கைகளில் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டிருக்கும், பயங்கரவாத நிறுவனங்களின் மூளையாக செயல்படுவர்களை நோக்கி செலுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளது.


இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாட்டிற்கு ஐ.நா.வில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார். ஜெய்சங்கரின் கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என அவர் அவதூறாக பேசினார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.