2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி செலுத்த தவறவிட்டனர் என  அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.


அதிர்ச்சி அறிக்கை:


உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, கோவிட் -19 தொற்று நோய் தொற்றால், இதர தடுப்பூசிகள் செலுத்துவது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொடிய நோயை ஒழிப்பதில் மிகப் பெரிய பின்னடைவு என்று தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட்டாலும், வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, கோடி கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டார்.


4 கோடி பேர் பாதிப்பு:


"நோய்த்தடுப்புத் திட்டங்களை மீண்டும் உரிய வகையில் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. 2.5 கோடி குழந்தைகள் தங்களது முதல் டோஸை தவறவிட்டனர் என்றும் 1.47 கோடி குழந்தைகள் தங்கள் இரண்டாவது டோஸை தவறவிட்டனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.






இந்த தடுப்பூசியானது தட்டம்மை தடுப்பூசியை கிட்டத்தட்ட முற்றிலும் தடுக்கக்கூடியது. தட்டம்மையானது தொற்றுநோயாக இருப்பதால், மக்கள் தொகையில் 95 சதவீதம் பேருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில், உலகளவில் 81 சதவீத குழந்தைகள் மட்டுமே முதல் டோஸையும், 71 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளதால் ஆபததான நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இது 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் டோஸின் மிகக் குறைந்த உலகளாவிய விகிதமாகும்.


விரைவாக பரவக்கூடும்:


நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளில் முதல் டோஸ் பெறாத முதல் ஐந்து நாடுகளாகும். 


உலக சுகாதார அமைப்பின் எந்தப் பிராந்தியமும் தட்டம்மை ஒழிப்பை அடையவில்லை என்றும், மேலும் வைரஸ் விரைவாக எல்லைகளைக் கடந்து பரவக்கூடும் என்று அதிர்ச்சி தகவலை இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ளது.


Also Read: China Covid - 19: சீனாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா.. மீண்டும் அமலுக்கு வரும் சீரோ கோவிட் பாலிஸி