உலகத்தில் மிகப்பெரிய சர்வாதிகாரி ஆட்சியை கொண்ட நாடு வடகொரியா. இந்த நாட்டில் அரசு மக்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடுகளை விதித்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நாட்டில் அணு ஆயுத உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகிறது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டு வருகின்றன. இதற்காக வடகொரியா மீது அமெரிக்க சில பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சீனா எல்லையை வட கொரியா நாடு மூடியுள்ளது. இதன் காரணமாக சீனாவுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டுள்ளது. 


 


இந்நிலையில் வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மழை காரணமாக அந்த நாட்டில் விவசாயம் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் அமெரிக்க பொருளாதார தடைகள் மற்றும் சீன எல்லை மூடல் ஆகியவை அந்நாட்டில் உணவு பற்றாகுறையை ஏற்படுத்தியுள்ளது. இதை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தன்னுடைய கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


அதன்படி வடகொரியாவின் பொருளாதார வளர்ச்சி 1990ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் மோசமான அளவிற்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு 1.35 மில்லியன் டன் அளவிற்கு அங்கு உணவு பற்றாகுறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு வட கொரியாவின் உணவு தேவை 5.75 டன் ஆக இருந்து வருகிறது. இந்த அளவிற்கு தற்போது உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் இறக்குமதி இல்லாததால் அங்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் அதிகரித்துள்ளது. 




தற்போது அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் சுமார் 45 அமெரிக்க டாலர் ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் தொராயமாக 3,300 ரூபாய் ஆக உள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் அங்கு உணவு வாங்க முடியாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது அங்கு மழை காரணமாக விவசாய நிலங்களும் மோசமாக சேதமடைந்துள்ளது. எனவே அந்த நாட்டில் விரைவில் உணவு பற்றாக்குறை சரி ஆகும் சூழல் இல்லை. ஏற்கெனவே கடந்து ஆண்டு அங்கு உணவு தட்டுப்பாடு சற்று அதிகமாக தொடங்கியது. அப்போது வட கொரியா அதிபர் கிம் ஜாங் அமெரிக்க விதித்த பொருளாதார தடைகள் தான் இந்த தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று தெரிவித்து வந்தார். 


இந்தச் சூழலில் அந்த உணவு தட்டுப்பாடு தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து சீனாவுடன் குறைந்த வர்த்தகமும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வட கொரியாவில் பெரிய பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கிரிக்கெட் பந்தை விடவும் பெரிசு... போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரக்கல்!