Nepal Landslide: நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து 63 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


63 பேரை தேடும் பணிகள் தீவிரம்:


மத்திய நேபாளத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கட்டுப்பாட்டை இழந்த இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் 63 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இடைவிடாத மழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையின் நாராயண்காத்-முகின் சாலையில் அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காணாமல் போன பயணிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி நடந்து வருகிறது, ஆனால் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 






நேபாள பிரதமர் உத்தரவு:


விபத்து தொடர்பாக சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி இந்திரதேவ் யாதவ் பேசுகையில்,  ”முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். அதிகாலை 3:30 மணியளவில் நிலச்சரிவு பேருந்துகளை அடித்துச் சென்றது. சம்பவ இடத்தில் நாங்கள் இருக்கிறோம், தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இடைவிடாத மழை இடையூறாக உள்ளது. காணாமல் போன பேருந்துகளைத் தேடுவதற்கான எங்கள் முயற்சிகள்,” என்று தெரிவித்தார். இதற்கிடையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், காணாமல் போன பயணிகளை தேடி, திறம்பட மீட்க, நாட்டின் உள்துறை நிர்வாகம் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாராயண்காத்-முகலின் சாலைப் பிரிவில் பேருந்து நிலச்சரிவில் மூழ்கியதில் சுமார் ஐந்து டஜன் பயணிகளைக் காணவில்லை மற்றும் பொருளாதார இழப்பு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக காணாமல் போன பயணிகளை தேடி, திறம்பட மீட்க, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


விமான சேவை நிறுத்தம்:


இதனிடையே,  சீரற்ற காலநிலை நிலவுவதால் காத்மாண்டுவில் இருந்து சித்வான் மாவட்டத்தில் உள்ள பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எல்லையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம், நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல், வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சிக்கி 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.