உலகின் வறட்சியான நாடாக பார்க்கப்படுவது ‘சோமாலியா’. இங்கு தலைவிரித்தாடும் பஞ்சத்தால் , பசியின் காரணமாக மக்கள் நாளுக்கு நாள் உயிரிழக்கும் சம்பவம்தான் அவலத்தின் உச்சம் . அதில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள்தான். இந்த நிலையில் சோமாலியா சத்துணவு மையங்களில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
சோமாலியா முழுவதும் உள்ள ஊட்டச்சத்து மையங்களில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக , வரும் மாதங்களில் சோமாலியாவின் சில பகுதிகள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என ஐ.நா அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஐ.நா குழந்தைகள் நிறுவனம் (யுனிசெஃப்) நேற்று 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து யுனிசெஃப் சோமாலியா பிரதிநிதி வஃபா சயீத் ஜெனிவா செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பொழுது "இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை இடையே நாடு முழுவதும் உள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் சுமார் 730 குழந்தைகள் இறந்துள்ளனர். அதே நேரம் பல இறப்புகள் முறையாக பதிவாகவில்லை. இதனால் இறப்புகள் அதிகரிக்ககூடும்” என தெரிவித்துள்ளது.
"நாம் வேகமாக செயல்படவில்லை என்றால் கற்பனை செய்ய முடியாத அளவில் குழந்தைகள் இறப்பதை பார்க்கப் போகிறோம்" என்று டேனிஷ் அகதிகள் கவுன்சிலில் சோமாலியாவின் நாட்டு இயக்குனர் ஆட்ரி க்ராஃபோர்ட் கவலை தெரிவித்துள்ளார்.