Luna 25: திடீரென ரஷ்யாவின் லூனா 25 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


லூனா 25:


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ தரப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் சந்திரயானுக்கு போட்டியாக லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா ஆகஸ்ட் 11-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கிமீ) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.


கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக  லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா 25 ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. லூனா-25, தோராயமாக சிறிய காரின் அளவு இருக்கும், சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருட காலம் வரை செயல்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது. லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. 


திடீர் சிக்கல்:


இதனை தொடர்ந்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  இதனால், இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதையை பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தகவல் தெரிவித்துள்ளது. 


முதலில் தரையிறங்குமா லூனா 25?


ஆகஸ்ட் 21ஆம் தேதி (நாளை) ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில்  தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதேவேலையில், இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லூனா 25 விண்கலத்தில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சந்திரயான்-3, லூனா-25 விண்கலத்தை முந்த வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. எனினும், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில்  தரையிறங்குவதற்கான பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


வேறுபாடு:


லூனா-25 ஐந்து நாட்கள் சந்திரனை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு, அதை  தொடர்ந்து 5-7 நாட்கள் சந்திரனின் சுற்றுப்பாதையில் பயணித்து  நிலவில் தரையிறங்கும். ஆனால், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு கிட்டதட்ட 40 நாட்கள் ஆகிறது. சந்திரயான்3 எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதிக நாட்கள் பயணிப்பதாக இஸ்ரோ தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல, சந்திரயான் -3, லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் இரண்டையும் சுமந்து செல்கிறது.  ரஷ்யாவின் லூனா 25 ஒரு லேண்டர் மிஷன் மட்டுமே சுமந்து செல்கிறது, அதில் ரோவர் இல்லை. விக்ரம் லேண்டர் 1,745 கிலோ எடையும், லூனா 25 லேண்டர் 800 கிலோ எடையும் கொண்டது. விக்ரமின் எதிர்பார்க்கப்படும் பணிக்காலம் 14 நாட்கள் ஆகும். அதே சமயம் லூனா 25 ஒரு வருட காலம் ஆய்வு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.