தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகள் நடத்திய பிறகு அவர் வயிற்றுக்குள் வித்யாசமாக ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. உடனே அறுவை சிகிச்சைக்கு தயார் செய்த மருத்துவர்கள் உள்ளே ஒரு செல்போன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அந்த கைதி ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. இரண்டு மணி நேர நீண்ட சிகிச்சைக்கு பிறகு போனை வயிற்றிலிருந்து அகற்றி, கைதியின் உயிரை மருத்துவர்கள் காப்பற்றிவிட்டனர்.



மருத்துவர்கள் ஏன் செல்போனை விழுங்கினார் என்று தெரியாததால் வினோத வழக்கு என பெயரிட்டு இந்த அறுவை சிகிச்சையை நடத்தி முடித்திருக்கின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு அந்த கைதியிடம் எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து வரலாம், ஏனென்றால் செல்போன் பேட்டரிகளில் உள்ள பல கெமிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர். சிகிச்சைக்கு பிறகு கைதி சீரான உடல்நலத்துடன் உள்ளார் என்று மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மொஹமது எல் தஷவுரி, "இது போல முழு செல்போனை விழுங்கி அறுவை சிகிச்சை செய்து எடுப்பது இதுவே முதல்முறை, பொதுவாக மேற்கத்திய உடல்களுக்கு இதுபோன்ற பொருட்களை அப்படியே விழுங்கி உடனடியாக வெளியில் எடுத்துக்கொள்ளும் தன்மை உள்ளது, பத்தில் இருந்து இருபது சதவிகிதம் வரை என்டோஸ்கோப்பி மூலம் எடுக்க வேண்டி வருகிறது, மற்றும் ஒரு சதவிகிதம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வருகிறது, விழுங்கியதை செரிமானம் செய்ய முடியாத அளவிற்கு பெரிது அது, அதனால் தான் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தார், செல்போன் பேட்டரியில் உள்ள ஆசிட் உடலுக்கு எப்போது வேண்டுமானாலும் தீங்கு விளைவிக்கலாம்" என்று கூறினார்.



ஆனால் உண்மையில் அவர் செல்போனை விழுங்கிய காரணம் சிறைக்குள் செல்போனை பயன்படுத்த கூடாது என்பதால், அவர் வயிற்றை லாக்கராக பயன்படுத்தி வந்திருக்கிறார். அடிக்கடி செல்போனை விழுங்கி பின்னர் காலையில் தானாக வெளியே வந்ததும் எடுத்துக்கொள்வாராம். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “இந்த கைதி அடிக்கடி செல்போனை விழுங்கி பின்னர் மலம் கழிக்கும்போது அதனை வெளியில் எடுப்பார். ஆனால் இந்த முறை அவரால் அதை எடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் அந்த செல்போனை பிளாஸ்டிக் பையில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதனால் அவருடைய செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட செல்போனை மருத்துவ குழுவினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.