ஆஸ்திரேலியாவில் ஒரு இளைஞரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.4.26 கோடி பணம் விழுந்தது. அந்தப் பணத்தை அவர் செலவழித்தார். அதுவும் எப்படி தெரியுமா? வெறும் தங்கக் கட்டிகளாக வாங்கி வைத்துள்ளார். அதுதவிர மேக் அப், டிசைனர் ஆடைகள் என்றும் அவர் வாங்கியுள்ளார். 


நடந்தது என்ன?


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அப்தல் காடியா. இவருடைய வங்கிக் கணக்கில் 4,20,000 பவுண்ட் ஸ்டெர்லிங் பணம் கிரெடிட் ஆகியுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.4.26 கோடி. இந்நிலையில் அந்த இளைஞர் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் வந்த வரைக்கும் லாபம் என நினைத்து அதை செலவழிக்க ஆரம்பித்துள்ளார். எதோ தனது சுய சம்பாத்தியத்தை முதலீடு செய்வதுபோல் அவர் அந்தப் பணத்தைக் கொண்டு தங்க பிஸ்கெட்டுகள் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டிசைனர் உடைகள், மேக் அப் சாதனங்களை வாங்கிக் குவித்துள்ளார். 


இந்நிலையில் பணத்தை மாறுதலாக வேறு வங்கிக் கணக்கில் செலுத்திய தம்பதி போலீஸை நாடினர். அவர்கள் வீடு வாங்க வைத்திருந்த பணத்தை தவறுதலாக இந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். சிட்னி வடக்கு கடற்கரையோரம் அவர்கள் வீடு பார்த்து வைத்திருந்தனர்.


குற்றம் எப்படி நடந்தது என்று விசாரித்த போது ஆடம் மேக்ரோ என்ற தரகரின் இ மெயில் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. வீடு வாங்க முற்பட்ட தம்பதி ஆடம் மேக்ரோவின் இமெயில் முகவரிக்கு அனுப்புவதாக நினைத்து அனைத்து தகவல்களையும் அனுப்ப அது ஹேக்கர்களால் கையாடல் செய்யப்பட்டுள்ளது.


தாரா மற்றும் கோரி காடியாவின் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றுமாறு இமெயில் மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களும் அவ்வாறே செய்ய அது காடியாவின் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. காடியாவை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் காடியா தன் வங்கிக் கணக்கிற்கு வந்த பணத்தை ஒப்புக் கொண்டார். அதை செலவழித்ததையும் ஒப்புக் கொண்டார். ஆனால் வங்கிக் கணக்கிற்கு தான் பணத்தை மாற்றவில்லை என்றார். இந்நிலையில் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


காடியா வாங்கிய தங்கம் இன்னும் மீட்கப்படவில்லை. தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழாந்த தாரா, கோரி தம்பதி கவலையில் உள்ளனர்.


தவறவிடப்பட்ட பணத்தை, நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர், தூய்மைப் பணியாளர் பற்றிய செய்திகளை எல்லாம் நாம் நம்மூரில் அவ்வப்போது பார்த்துள்ளோம். அத்தகைய நபர்கள் இருக்கும் இதே உலகில் தான் 4.2 கோடி பணத்தை ஏப்பம்விட்ட இந்த இளைஞரும் உள்ளார்.